கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி
சென்னை: தமிழக எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டனர் என தமிழிசை கூறியதற்கு கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார்.
தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு, பதவியேற்பில் பல பேர் ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டு உள்ளார்கள் என்று திமுக, காங்கிரஸ் எம்.பி க்களை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்திருந்தார்.
இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் கே.எஸ்.அழகிரி. அப்போது அவர் பேசியதாவது, பாஜக அவர்களின் கோற முகத்தை கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள், காரணம் ஒரே நாடு ! ஒரே தேர்தல் ! என்ற கோஷத்தை முன் வைத்து இருக்கிறார்கள். பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும் தேசத்தை ஒற்றுமை படுத்தும் விதமாக இருக்கும் என்று கூறுவார்களே தவிர உண்மையில் அதில் எழும் பிரச்சனையை பாஜகவினரால் கூட தீர்க்க முடியாது.
பாஜக உருவாக்கி வரும் பூதம்
பாஜக உருவாக்கி வரும் பூதம் அவர்களையே விழுங்கிவிடும். இந்தியாவில் உள்ளது கூட்டாச்சி முறை தானே தவிர, ஒரே நாடு என்று ஒன்றும் இல்லை. பல்வேறு மதம், மொழி என்று கூட்டு அமைப்பு தான் இந்தியாவே தவிர ஒரே நாடு என்று இவர்கள் கற்பனை செய்வது முற்றிலும் தவறானது. முன்னாள் அறிஞர்களால் இந்திய யூனியன் என்று நாட்டை பலப்படுத்தினார்கள், ஆனால் இன்று பாஜக ஒரே நாடு ! ஒரே தேர்தல் ! என்பதன் மூலம் பலவீனப்படுத்துகிறது.
அதிமுகவில் குழப்பம்
நாட்டை பலப்படுத்த வேண்டும் என்றால், அந்த பிரச்சனையை தொடாமல் இருப்பதே நல்லது. அதையும் மீறி தேன் கூட்டில் கை வைத்தால் ஒரு நாள் பாஜகவையே கொட்டும், அதுமட்டுமின்றி இது போன்ற கொள்கையின் மூலம் ஆர்.எஸ்.எஸ் கொள்கையை பாஜக நடைமுறைப்படுத்த பார்க்கிறது. அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
கவலை பட மாட்டார்கள்
இன்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சி.வி.சண்முகம் அனுமதிக்கப்படாததை பற்றி கவலை பட மாட்டார்கள். காரணம் ஏற்கனவே அடிமை சாசனத்தை எழுதி கொடுத்து விட்டார்கள். அந்த அடிமை சாதனைத்தில் இருந்து அவர்களால் மீற முடியாது காரணம் பாகுபலியில் உள்ள கட்டப்பாவை போன்றவர் இந்த எட்டப்பா என முதல்வரை விமர்சனம் செய்தார்.
அழிக்க நினைக்க கூடாது
7ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்தி மட்டும் இந்தியாவின் ஆட்சி மொழி என்று இருப்பது தவறு, அதை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இந்திய ரயில்வே என்பது உலகத்தின் இரண்டாவது மிக பெரிய சேவை ஆகும், அதனை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும். ஆளும் பாஜக அரசினால் புதிய பொதுத்துறையை உருவாக்க முடியவில்லை என்றாலும் இருப்பதை அழிக்க நினைக்க கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
தமிழிசை புரிந்து கொள்ள வேண்டும்
தமிழிசைக்கு எது முரண் ? எது முரண் இல்லை ? என்பதே தெரியாது. ஒரே கையெழுத்தை பின்பற்ற வேண்டும் என்பதற்காக தான் பதவி ஏற்பின் போது ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டு இருப்பார்கள். தமிழக எம்.பி கள். கையெழுத்திற்கு எழுத்து மொழி இல்லை. அது குறியீடு சார்ந்தது என்பதை தமிழிசை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்திலும் மறு சீரமைப்பு
ராகுல் காந்தி கட்சியை மறுசீரமைப்பு செய்து வருகிறார். எல்லா மாநிலத்திலும் மறுசீரமைப்பு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு அங்கம் தான் கர்நாடகாவில் மறுசீரமைப்பு நடைபெற்றது. இதன் தாக்கம் நாடு முழுவதும் இருக்கும் தமிழகத்திலும் நிச்சயமாக மறு சீரமைப்பு இருக்கும் என்றும் கூறினார்.