சத்ரியன் விஜயகாந்த்தும்.. சிஎஸ்கே தோனியும்.. 14 மாத வனவாசத்திற்கு பிறகு வெறியுடன் திரும்பும் வேங்கை
சென்னை: எதிராளிகள் செய்யும் தொந்தரவு அத்துமீறி போகும். வெறுத்துப்போய், போலீஸ் பதவியை ராஜினாமா செய்வார் விஜயகாந்த். ஒரு கட்டத்தில், மறுபடியும் வேலைக்கு சேர வேண்டும் என்ற விருப்பத்தில் மேலதிகாரி விஜயகுமாரிடம் வந்து நிற்பார்.
துப்பாக்கியை கையில் கொடுத்து, அங்கே இருக்கும் ஷீல்டை பார்த்து "சுடு" என்று விஜயகுமார் துப்பாக்கியை நீட்ட.. கை நடுங்கியபடி வாங்கும் விஜயகாந்த் ஷீல்டின் மையப் பகுதியை தவிர மற்ற எல்லா இடத்திலும், ஏனோ தானோ என்று சுட்டுக் கொண்டிருப்பார்.
விஜயகாந்திடமிருந்து துப்பாக்கியை திரும்பி வாங்கி.. அப்படியே வெளியே போக சொல்வார் விஜயகுமார். 'சத்ரியன்' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த காட்சி மிகவும் பிரபலமானது.
இந்த காலத்தில் இப்படியா?.. 33 மாதங்கள்.. 70 வயது தாயை பைக்கில் ஆன்மீக சுற்றுலா அழைத்து சென்ற மகன்
விஜயகாந்த் நிலைமையில் தோனி
போலீசாருக்கு மட்டும் கிடையாது.. கிரிக்கெட் வீரர்களுக்கும் பயிற்சி எந்த அளவுக்கு அவசியம் என்பதைச் சொல்லத்தான் இந்த காட்சியை நினைவுபடுத்துகிறோம். அது சரி இப்போ எதற்கு இதைச் சொல்கிறீர்கள் அப்படின்னு கேட்பீர்கள். கிட்டத்தட்ட சத்ரியன் திரைப்பட, விஜயகாந்த் நிலைமையில் தான் இருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி. 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் தேதி.. இதுதான், கடைசியாக இந்திய அணிக்காக தோனி விளையாடிய கடைசி மேட்ச்.
14 மாதங்கள் பிரேக்
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், மான்செஸ்டர் ஓல்ட் ட்ராபர்ட் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கடைசி வரை போராடிய தோனி ரன் அவுட் மூலம் வெளியேற்றப்பட்டார். 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இதன்பிறகு தோனி இதுவரை இந்திய அணிக்காக விளையாடவில்லை. 14 மாதங்கள் நீண்ட ஓய்வு.
சர்வதேச கிரிக்கெட் ஓய்வு
இந்த அதிர்ச்சி போதாது என்று, சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார் தோனி. எனவேதான் சத்ரியன் விஜயகாந்துக்கும் சிஎஸ்கே தோனிக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது என்று சொல்ல வந்தோம்.
மன தெம்பு
சச்சினுக்கு பிறகு இந்திய வீரர்களில், தோனிக்குத்தான் செல்வாக்கு. உலகின் எந்த கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு போனாலும், ஆரவார கோஷம் இருக்கும். தோனி.. தோனி.. என்ற சத்தம் ஸ்டேடியத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்துக் கொண்டிருக்கும். வெறும் பயிற்சி மட்டும் கிடையாது.. இந்த உற்சாக குரலைக் கேட்டும் 14 மாதங்கள் ஆகிவிட்டது தோனிக்கு. உடலளவிலும் மனதளவிலும் இப்போது தோனியின் திறமை பாதியாக குறைந்திருக்கும் என்று வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.
ஆட்டத்திறமை
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக்கொண்டு ஐபிஎல்லில் ஆடக்கூடிய வீரர்கள் வழக்கமான ஆட்டத்திறனுடன் இருப்பார்கள். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்து விட்ட பிறகு ஐபிஎல் போன்ற மற்ற தொடர்களில் அவர்களது அதிரடி வேகமும், ரன் குவிப்பு திறனும் குறைந்து விடுவது வழக்கம். ஆடம் கில்கிறிஸ்ட், சென்னை காக ஆடிய மேத்யூ ஹைடன் போன்றவர்கள் இதற்கு நல்ல உதாரணம். இதில் சில விதி விலக்கு உண்டு. ஆர்சிபி அணியின் ஏபி டிவில்லியர்ஸ் இதற்குப் பொருத்தமானவர். தென்னாபிரிக்க அணியில் விளையாடி வந்த அவர், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஓய்வு அறிவித்து விட்ட பிறகும் அவரது அதிரடியில் பெரிய மாற்றம் இல்லை.
ஓய்வுக்கு பிறகு ஓய்ந்த வீரர்கள்
இருப்பினும் பெரும்பாலான வீரர்கள் நிலைமை அப்படி இல்லை. நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம், இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன்.. இப்படி ஓய்வுக்குப் பிறகு ஓய்ந்து போன பிளேயர்கள் ஏராளம், ஏராளம். எனவேதான் சிஎஸ்கே அணியின் துருப்பு சீட்டு தோனி அப்படியான சூழலில் சிக்கிக் கொள்ளக் கூடாதே என்ற ஏக்கம் ரசிகர்களிடம் இருக்கிறது. கடந்த சில ஐபிஎல் தொடர்களில் தோனியின் ரன் குவிப்பு திறமை குறைந்திருந்த நிலையில் இப்போதைய சூழ்நிலை அவரை இன்னும் பாதித்து விடுமோ என்ற கவலை ரசிகர்களிடம் இருக்கிறது.
தோனி நினைத்தால்..
ஆனால் ஒரு விஷயத்தை மறந்து விட வேண்டாம்.. முடியாது என்று நினைப்பதை முடித்துக் காட்டுபவர்தான் தோனி!!. ஆனானப்பட்ட அசார் முகமது, சவுரவ் கங்குலி போன்றவர்கள் எவ்வளவோ முயன்றும், நிறைவேற்ற முடியாத உலக கோப்பை கனவை, நனவாக்கி தந்தவர் இவர்தான். அசத்தலான யார்க்கர் பந்தை பவுலர் வீசும்போது, ஒரு பேட்ஸ்மேன் மிஞ்சிப் போனால் என்ன செய்ய முடியும்? பவுல்ட் ஆகாமல் தடுக்கலாம்.. அல்லது தட்டுத்தடுமாறி சிங்கிள் ஓடலாம். ஆனால் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் அதை சிக்சருக்கு பறக்க விடலாம் என்று முதல் முறையாக உலக ரசிகர்களுக்கு காட்டியது தோனிதானே. இப்படி எந்த வகையான சவாலையும் எதிர்கொண்டு சாதித்த தோனி, இந்த 14 மாத 'வனவாச காலத்தையும்' வெற்றிகரமாக கடந்து, ஐபிஎல் எனும் குருஷேத்திரப் போரில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கலாம்.
பழைய பன்னீர் செல்வமாக வரனும்
சத்ரியன் திரைப்படத்தின் ஒரு பாதி காட்சியைத் தான் நாங்கள் மேலே குறிப்பிட்டோம். அதன் தொடர் காட்சி ஒன்று வரும். நன்கு உடற்பயிற்சி செய்து வெறியேற்றியபடி வரும் விஜயகாந்த்.. மறுபடியும் விஜயகுமார் அறைக்குள் கம்பீர சிங்கமென நுழைவார். அப்போது விஜயகாந்த் துப்பாக்கியால் சுடும் போது அந்த ஷீல்ட் இருந்த இடத்தில் இருந்து தெறித்து ஓடும். அதே மாதிரி பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வருவார் தோனி. ஐபிஎல் ஷீல்டை தெறிக்கவிடுவார். அதை உலகமே உச்சுக் கொட்டி ஆச்சரியத்தோடு பார்க்கத் தான் போகிறது.. நாமும் தான்!!