தனித்தீவான முடிச்சூர்.. தரை தளம் வரை சூழ்ந்த வெள்ள நீர்.. 2015 வெள்ள பாதிப்பின் ஜெராக்ஸ்!
சென்னை: நிவர் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி தாம்பரம் முடிச்சூர் பகுதி முழுவதும் இடுப்பளவு வெள்ளநீரால் சூழ்ந்துள்ளது. 2015-ஆம் ஆண்டு எப்படி வெள்ளப் பாதிப்பு இருந்ததோ அதே போல் இந்த முறையும் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, புதுவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை பெய்தது.
இதனால் மேற்கண்ட இடங்களில் தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. புயலானது மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடந்ததால் புயலுக்கு வட பகுதிகளில் கனமழை பெய்தது.
நகர மறுக்கிறது.. எங்க போய் நிக்குது பாருங்க நிவர்.. திருவண்ணாமலையில் விடாமல் சுழன்று அடிக்கும் புயல்
பல்லாவரம்
புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், முடிச்சூர், அஸ்தினாபுரம், மண்ணிவாக்கம், பீர்க்கங்கரணை உள்ளிட்ட பகுதிகளில் அதிக கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளை சூழ்ந்துள்ள ஏரிகள் நிரம்பியதால் அவை பாதுகாப்பு காரணங்களுக்காக திறந்துவிடப்பட்டதாக கூறுகிறார்கள்.
வீடுகள்
இதனால் முடிச்சூர், ஹஸ்தினாபுரம், வரதராஜபுரம், பீர்க்கங்கரணை உள்ளிட்ட பகுதிகளில் தரை தளம் வரை வெள்ளநீர் மூழ்கியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு மாடிகளில் தஞ்சமடைந்துள்ளார்கள். அங்கு குளிரில் குழந்தைகளை வைத்து ஏதோ வீட்டிலிருந்த உலர் உணவுகளை வைத்து கொண்டு பசியாற்றி வருகிறார்கள்.
அடையாறு
சிலர் அந்த இடுப்பளவுக்கு மேல் உள்ள தண்ணீரில் நடந்து மூட்டை முடிச்சுகளுடன் வேறு இடங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். சிலர் கைக்குழந்தைகளுடன் இடம்பெயர்கிறார்கள். படகு மூலம் மீட்கும் பணிகள் நடைபெறுகின்றன. அடையாறு கால்வாயை படப்பையை தாண்டி செல்லும் போது குறுகி காணப்படுவதால் இது போல் தண்ணீர் தேங்குகிறது.
தண்ணீர் தேங்க காரணம் என்ன
கால்வாயை அகலப்படுத்திவிட்டால் தண்ணீர் தேங்காமல் நாங்களும் மற்றவர்களை போல் நிம்மதியாக வாழ்வோம் என்கிறார்கள். கடந்த 2015-ஆம் ஆண்டு முதலே இது போல் சிறு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி வெள்ள நீரில் தத்தளிக்கும் சூழல் நிலவுவதாக குற்றம்சாட்டுகிறார்கள். குழந்தைகளை வைத்து கொண்டு மக்கள் அவதியடைகிறார்கள்.
இரவுகள்
மொட்டை மாடிகளில் கடும் குளிரில் கும்மிருட்டில் தவளைகளின் சப்தங்களில் பாம்பு வந்துவிடுமோ என்ற அச்சத்துடன் இரவுகளை கழிப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள். இனி வரும் ஆண்டுகளில் ஏற்படும் புயலை கருத்தில் கொண்டு அரசு கால்வாயை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.