துப்பாக்கிச் சூடு குறித்த ஆதாரங்களை கட்டவிழ்த்த முகிலன் மாயம்.. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
சென்னை: துப்பாக்கிச் சூடு குறித்த ஆதாரங்களை வெளியிட்ட முகிலன் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த இவர், கடந்த 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு தகவலை அளித்தார்.
அதில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வன்முறையில் பொதுமக்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயரதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பது தொடர்பான ஆதாரங்களை முகிலன் வெளியிட்டார்.
எழும்பூர் ரயில்
பின்னர் பேசிய அவர் இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த சந்திப்பு முடிவுற்ற பிறகு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு ரயிலில் சென்றுள்ளார்.
ரயில்வே போலீஸில் புகார்
இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் போனில் பேசிய அவரிடம் இருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை. பாதி வழியில் மாயமானதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
ஆட்கொணர்வு மனு
முகிலன் கடத்தப்பட்டிருக்கலாம். இல்லாவிட்டால் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களோ போலீஸாரோ அவரை ரகசிய இடத்தில் கடத்தி வைத்திருக்கலாம் என அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் முகிலன் மாயமானது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆட்கொணர்வு மனுவை கடந்த 18-ஆம் தேதி தாக்கல் செய்தார்.
விளக்கமளிக்க உத்தரவு
இந்த மனு மீது விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் ஆட்கொணர்வு மனு குறித்து சென்னை போலீஸ் கமிஷனர், காஞ்சிபுரம், விழுப்புரம் எஸ்பிக்கள் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
உத்தரவு
இந்த நிலையில் முகிலன் மாயமான வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக டிஜிபி ராஜேந்திரன் மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதனால் முகிலன் குறித்த தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.