எழும்பூர் ரயில் நிலையத்தில் முகிலன் கடத்தப்பட்டாரா?.. சிபிசிஐடி விசாரணையில் தகவல்
Recommended Video
சென்னை: சென்னை எழும்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட முகிலனிடம் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் தன்னை யாரோ மர்ம நபர்கள் கடத்தியதாக முகிலன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை நோக்கி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 13 பேர் பலியாகினர். இந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட ஒரு சம்பவம் என்பதை ஆதாரத்துடன் சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் வெளியிட்டார்.
இதையடுத்து அன்றிரவே சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்கு செல்லும் ரயிலில் முகிலன் புறப்பட்டார். அப்போது அவர் நாகர்கோவிலை வந்தடையவில்லை. மேலும் முகிலனின் தொலைபேசி இணைப்பும் கிடைக்கவில்லை.
உயர்நீதிமன்றம்
இதனால் முகிலன் காணாமல் போனதாக கூறப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முகிலனை கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவி பூங்கொடியும் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
ஆந்திர போலீஸ்
இந்த நிலையில் முகிலன் குறித்த துப்பு கிடைத்ததால் கடந்த ஜூன் 6-ஆம் தேதி சிபிசிஐடி போலீஸார் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு முகிலன் திருப்பதி ரயில் நிலையத்தில் ஆந்திர போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.
காட்பாடியில் முகிலன்
பின்னர் அவரை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து ஆலோசனை செய்தனர். இதையடுத்து அவரை வேலூர் போலீஸிடம் ஒப்படைக்கலாம் என முடிவு செய்து சிபிசிஐடி காவல் ஆய்வாளர் வஜ்ரவேல் தலைமையிலான போலீஸாரிடம் நள்ளிரவு 12 மணிக்கு முகிலன் ஒப்படைக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில்
தற்போது சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி போலீஸ் வசம் உள்ள முகிலனிடம் காலை முதல் கேமரா பதிவு மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது 140 நாட்கள் எங்கிருந்தீர்கள். யாரேனும் உங்களை கடத்தினரா போன்ற தகவல்களை போலீஸார் விசாரித்தனர். அப்போது எழும்பூர் ரயில் நிலையத்தில் தன்னை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கடத்தியதாகவும் , நினைவு திரும்பிய பின்னர் பார்த்தபோது தான் வேறு ஒரு மாநிலத்தில் இருந்ததாகவும் முகிலன் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. அவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்றத்தில் உள்ளதால் முகிலன் நீதிமன்றத்தில் நாளை ஒப்படைக்கப்படுவார்.