பெண் கொடுத்த பாலியல் புகார்.. கோர்ட்டில் ஆஜர்படுத்த கரூர் கொண்டு செல்லப்பட்டார் முகிலன்
சென்னை: பாலியல் புகாரில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முகிலனை, கரூர் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்த அவர் அங்கு அழைத்து செல்லப்படுகிறார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் எதேச்சையாக நடந்தது இல்லை என்றும் திட்டமிட்ட சதி என்றும் அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என்றும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் அன்றைய தினம் முதல் காணவில்லை. இதனிடையே முகிலனுடன் போராட்டங்களில் ஈடுபட்ட நாமக்கல் பெண், கரூரில் ஒரு பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த இரு தினங்களுக்கு முன் திருப்பதியில் ஆந்திர போலீஸாரால் மீட்கப்பட்டார்.
இதையடுத்து அவர் சென்னை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த நிலையில் பாலியல் வழக்கில் முகிலன் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முகிலன் இன்று காலை வார்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து பாலியல் வழக்கு தொடர்பான புகார் கரூர் நீதிமன்றத்தில் உள்ளதால் முகிலனை அங்கு நாளை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து முகிலன் கரூருக்கு அழைத்து செல்லப்படுகிறார்.