பேரம் பேசினர்.. படியாததால் மிரட்டி நிறைய ஊசிகளை போட்டனர்.. ஸ்டெர்லைட் நிர்வாகம் மீது முகிலன் புகார்
Recommended Video
சென்னை: ஸ்டெர்லைட் குறித்து பேசவே கூடாது என மிரட்டிய மர்ம நபர்கள் தனக்கு நிறைய ஊசிகள் போட்டு தன்னை துன்புறுத்தியதாகவும் இதன் பின்னணியில் ஸ்டெர்லைட் நிர்வாகம் இருப்பதாகவும் முகிலன் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியான நிலையில் அது திட்டமிட்ட சதி என்றும் அதற்கான ஆதாரம் இருக்கிறது என்றும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்.
இதையடுத்து அன்றைய தினம் முதல் அவரை காணவில்லை. இந்த நிலையில் நேற்று முன் தினம் திருப்பதியில் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய முகிலனை ஆந்திர மாநில போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து முகிலன் என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர் தமிழக போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார்.
நீதிபதி வீட்டில்
இந்த நிலையில் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரிடம் வாக்குமூலத்தை பெற்றனர். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், நள்ளிரவு 1 மணிக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பேரம்
நீதிபதி வீட்டுக்கு அழைத்து செல்வதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த முகிலன் கூறுகையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடக் கூடாது என என்னை மர்ம நபர்கள் மிரட்டினர். மேலும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் நான் வாய்த் திறக்காமல் இருக்க பேரம் நடத்தப்பட்டது.
உயிரோடு
இதற்கு நான் பணியாததால் எனக்கு ஏராளமான ஊசிகளை போட்டு துன்புறுத்தினர். என் குடும்பத்தை இல்லாமல் செய்துவிடுவோம் என மிரட்டினர். நான் பல அவமானங்களை சந்திக்க நேரிடும் என்றும் என்னை மிரட்டினர். பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழக மக்களாலேயே நான் இதுவரை உயிரோடு இருந்தேன்.
வேறு யார்
என்னை கடத்தியது உண்மைதான். இதன் பின்னணியில் ஸ்டெர்லைட் நிர்வாகத்தை தவிர வேறு யார் இருக்க முடியும் என பரபரப்பு தகவல்களை முகிலன் எழுப்பினார்.