மீட்கப்பட்ட முகிலனை நாளை ஹைகோர்ட்டில் ஆஜர்படுத்தும் சிபிசிஐடி போலீஸ்
Recommended Video
சென்னை: ஆந்திர போலீஸாரிடம் இருந்து மீட்கப்பட்ட முகிலனிடம் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் அவர் நாளை ஹைகோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளரும் சமூக ஆர்வலருமான முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி திடீரென மாயமானார்.
அவர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காணாமல் போனதை சிசிடிவி காட்சிகளை வைத்து சிபிசிஐடி போலீஸார் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை ஆந்திர ரயில்வே போலீஸார் கண்டனர்.
இதனிடையே இவரை ராஜமுந்திரி எக்ஸ்பிரஸில் சென்ற நண்பர் சண்முகமும் கண்டு கொண்டார். இந்த தகவல் மனைவி பூங்கொடி மூலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் ரயில்வே பிளாட்பாரத்தில் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்ததால் அவரை ஆந்திர போலீஸார் கைது செய்தனர். அந்த நேரத்தில் முகிலன் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். அப்போதுதான் தாங்கள் கைது செய்தது முகிலன் என்பது ஆந்திர போலீஸாருக்கு தெரிய வந்தது.
பின்னர் இரவோடு இரவாக தமிழக போலீஸாரிடம் முகிலனை ஒப்படைத்தனர். இதையடுத்து வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட முகிலன் இன்று அதிகாலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
சென்னை எழும்பூர் சிபிசிஐடி போலீஸாரிடம் வசம் இருந்த முகிலனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முகிலனை கண்டுபிடிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு நிலுவையில் இருப்பதால் அவரை சிபிசிஐடி போலீசார் நாளை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள்.
அப்போது முகிலனிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையையும் போலீஸார் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.