நீதிபதி முன்னிலையில் முகிலன் ஆஜர்.. போலீசாருக்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு
Recommended Video
சென்னை: தான் கடத்தப்பட்டதற்கு காவல்துறை உடந்தை என குற்றம்சாட்டி முகிலன் முழக்கம் எழுப்பினார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள நீதிபதி ரோஷ்லின் துரை இல்லத்துக்கு முகிலனை அழைத்து சென்ற போது இவ்வாறு முழக்கமிட்டார். காவல்துறை தன் மீது பாலியல் வன்கொடுமை என பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக முகிலன் தெரிவித்துள்ளார்.
எழும்பூரில் சிபிசிஐடி விசாரணைக்குப் பின் மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன். இதனைத் தொடர்ந்து, நீதிபதி வீட்டிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையில், காணாமல் போன காலக்கட்டத்தில் எங்கிருந்தார் என்ற தகவல்களை கேட்ட போது முகிலன் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். விசாரணையின் போது முகிலன் பதிலளிக்க மறுத்து விட்டதாக சிபிசிஐடி செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் ராஜேஸ்வரி (வயது 37), கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முகிலன் மீது கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் மனு அளித்திருந்தார்.
மாயமான முகிலன் திருப்பதியில் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி விட்டு, சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.