மழை எதிரொலி... தூக்கத்தை துறந்த நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள்
Recommended Video
சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குளம் போல் தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் ஆள்பற்றாகுறை காரணமாகவும், தொடர்ந்து மழை பெய்வதாலும் அந்தப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இப்போதைக்கு மழை விடாது.. இன்னும் 3 நாட்கள் தீவிரமாக பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்!
குளமாக மாறிய சாலை
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரத்தின் பெரும்பாலான சாலைகளும், தெருக்களும் குளம் போல் காட்சியளிக்கின்றன. இந்நிலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தூக்கம் துறப்பு
மேலும், அடிமட்ட ஊழியர்கள் மட்டுமல்லாமல் பொறியாளர்கள் உட்பட உயர் அதிகாரிகளும் 24 மணி நேரமும் நிலைமையை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் பரபரத்து காணப்படுகின்றன.
விளக்கம்
மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற பம்பரமாக சுழன்றாலும், அதில் ஏதோ சுணக்கம் இருப்பது பற்றி சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஏ.இ. (உதவி பொறியாளர்) ஒருவரிடம் பேசிய போது, ஆள்பற்றாக்குறையும், இடைவிடாது பெய்யும் மழையும் தான் காரணம் என விவரித்தார்.
வடிகால் வசதி
மேலும், நம்மிடம் பேசிய அவர் வடிகால் வசதியின்றி வீடுகளை கட்டிவிட்டு மொத்த குற்றச்சாட்டையும் மாநகராட்சி மேல் வைத்தால் அது ஏற்கத்தக்கதல்ல என்றும், அதே நேரத்தில் இது போன்ற நேரங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை உறிஞ்ச வெளிநாடுகளில் இருந்து அதிநவீன இயந்திரங்களை அரசு வாங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.