மூணாறு தொழிலாளர்களின் மரண செய்தி மன வேதனை தருகிறது - ஓபிஎஸ், ஸ்டாலின்,சீமான் இரங்கல்
மூணாறு அருகே தேயிலை தோட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை: மூணாறு ராஜமாலா தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
மூணாறு ராஜமாலா தேயிலைத் தோட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கி பாதுகாக்க வேண்டும் என்று கேரளா முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று அனைவரும் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
மூணாறு நிலச்சரிவில் சிக்கிய கோவில்பட்டியைச் சேர்ந்த 55 பேரின் கதி என்ன - உறவினர்கள் கதறல்
மன வேதனை
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது இரங்கல் செய்தியில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
உடனடி உதவி தேவை
உயிரிழந்தவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மூணாறு ராஜமாலா தேயிலைத் தோட்ட நிலச்சரிவில் 80க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்! நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவ வசதிகளைச் செய்து, இழப்பீடு வழங்கி அவர்களை கேரளா முதல்வர் பாதுகாக்க வேண்டும் தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
சீமான் அதிர்ச்சி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது இரங்கல் செய்தியில் கேரள மாநிலம் மூணாறில் தேயிலைத் தோட்டப்பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததாகவும், 60க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும் வெளியாகும் செய்திகள் பேரதிர்ச்சியையும், பெருந்துயரத்தையும் அளிக்கிறது.
துயர் துடைப்பு உதவிகள்
கேரள அரசு, இப்பெருந்துயரில் இருந்து மீண்டு வரவும், மீட்புப்பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு உதவிகள் வழங்கிடவும் துணைநிற்க வேண்டியது தமிழர்களின் தார்மீகக் கடமை என்பதனை உணர்ந்து தமிழக அரசு தேவையான உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.