முரசொலி நில ஆவணம்.. ஸ்டாலின் தாக்கல் செய்யும் நாளுக்காக தமிழ்நாடே காத்திருக்கு.. ஜி.கே.மணி
Recommended Video
சென்னை: முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களை ஸ்டாலின் தாக்கல் செய்வதை பாமக வரவேற்பதாகவும், அந்த நாளுக்காக தமிழ்நாடு காத்திருப்பதாகவும் பாமக தலைவர் ஜி.கே.மணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி வியாழக்கிழமை(நவ.7) வெளியிட்ட அறிக்கையில், "முரசொலி நிலம் குறித்த அனைத்து ஆவணங்களையும் உரிய அதிகாரம் படைத்த ஆணையத்திடம் ஒப்படைக்கப் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
எப்போது, எந்த ஆணையத்திடம் அந்த ஆவணங்களை ஒப்படைக்கப் போகிறார் என்பதை அறிவிக்காவிட்டாலும் கூட, பெயரளவிலாவது முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களை வெளியிட முன்வந்திருப்பதை பாமக வரவேற்கிறது.
அயோத்தி வழக்கில் எப்படி தீர்ப்பு வந்தாலும் ஏற்போம்.. இஸ்லாமிய அமைப்பு தலைவர் அர்ஷத் மதானி உறுதி
விரிவான அறிக்கை
முரசொலி நிலம் பற்றி விளக்கம் அளிப்பதற்காக நேற்று வெளியிட்ட அறிக்கையில், திமுகவின் அறைகூவலுக்கு பாமகவிடமிருந்து பதில் வரவில்லை என்று கூறியிருக்கிறார். மு.க.ஸ்டாலினின் அறியாமையை நினைத்து பரிதாபம்தான் வருகிறது. முரசொலி நிலம் குறித்து மு.க.ஸ்டாலின் விடுத்த அறிக்கை தொடர்பாக முதலில் அக்டோபர் 20 ஆம் தேதியும், பின்னர் 27 ஆம் தேதியும் நான் விரிவாக பதிலறிக்கை வெளியிட்டேன்.
பதுங்குவது
ஒரு விஷயத்தில் பதுங்குவதற்காகவே படிக்கவில்லை என்று கூறுவதும் கூட ஒரு வகை கலை தான். அந்தக் கலையில் தேர்ந்தவர்கள் திமுக தலைமை பீடத்தினர் என்பதை அனைவரும் அறிவர்.
யு.டி.ஆர் ஆவணங்கள் எங்கே?
முரசொலி நில சர்ச்சை எழுந்த நாள் முதல் இன்று வரை பாமகவும், அதன் நிறுவனர் ராமதாஸும் எழுப்பும் கேள்விகள் மிகவும் எளிமையானவை. முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல... அது தனியார் பட்டா நிலம் என்றால், அதற்குரிய ஆவணங்களான நிலப்பதிவு பத்திரங்கள், 1924 ஆம் ஆண்டின் யு.டி.ஆர் ஆவணங்கள் எங்கே? அவை மு.க. ஸ்டாலினிடம் உள்ளனவா, இல்லையா? அரசு ஆதிதிராவிட மாணவர்கள் நல விடுதி அமைந்திருந்த இடம் முரசொலிக்கு கைமாறியது எப்படி? என்பனதான் அந்தக் கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் இன்னும் பதிலளிக்கவில்லை.
20 ஆண்டு கழித்து பட்டா
இரண்டாவதாக, பொதுவாழ்விலும், நீதிமன்றத்திலும் குற்றம் சுமத்தியவர்தான் அதை நிரூபித்திட வேண்டும் என்ற புதிய உண்மையை மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மகிழ்ச்சி. அப்படியானால், முரசொலி நிலம் குறித்து ராமதாஸ் கடந்த 17.10.2019 அன்று ட்விட்டரில் பதிவிட்ட 24 மணிநேரத்தில், 1960-களில் வாங்கப்பட்ட அஞ்சுகம் பதிப்பகத்திற்கு சொந்தமான நிலத்திற்கு 20 ஆண்டுகள் கழித்து பெறப்பட்ட பட்டாவை அவசரம், அவசரமாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டது ஏன்? முரசொலி பட்டா நிலம் என்று நம்ப வைக்கவா?
பதில் இல்லை
முரசொலி நிலம் குறித்த பட்டாவை வெளியிட்ட மு.க.ஸ்டாலின் மூலப் பத்திரத்தை வெளியிடாதது ஏன்? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பி இன்றுடன் 20 நாட்கள் ஆகி விட்ட நிலையில் அந்தப் பத்திரங்களை ஸ்டாலின் இன்று வரை வெளியிடவில்லை என்றால், அதன் பொருள் என்ன? என்பது அனைவருக்கும் தெரியும். 24 மணிநேரத்தில் பட்டா வெளியான நிலையில், 20 நாட்களாகியும் மூலப்பத்திரம் வெளிவரவில்லை என்பதிலிருந்தே இந்த விஷயத்தில் உண்மை என்ன? என்பது உலகத்திற்குத் தெரிந்துவிட்டது.
தமிழகம் காத்திருக்கு
இப்போதும் கூட எந்த ஆணையத்திடம், எப்போது ஆவணங்களை தாக்கல் செய்யப் போகிறார் என்பதை ஸ்டாலின் கூறவில்லை. எனினும், முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களை அவர் தாக்கல் செய்யப் போகும் நாள் எந்த நாளோ, அந்த நாளுக்காக தமிழ்நாடு காத்திருக்கிறது. அந்த ஆவணங்கள் மற்றும் அது குறித்த விசாரணையின் முடிவில் முரசொலி நிலம் குறித்த புதிய உண்மைகள் கூட வெளிவரலாம்," இவ்வாறு ஜிகே மணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.