சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

’கல்வி நீரோடையில் முதலைகள்’.. அதிமுக ஆட்சியில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஊழல்.. முரசொலி

Google Oneindia Tamil News

சென்னை: கல்வி நீரோடையில் முதலைகள் என அதிமுக ஆட்சியில் கல்வித் துறையில் எங்கும் ஊழல் நடைபெறுவதாக முரசொலியில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கத்தில் கூறுகையில்,
அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் - லஞ்சம் - மோசடிகள், அங்கிங்கெனாத படி எங்கணும் ஆழ வேரூன்றி, கிளை பரப்பி, விழுதுகள் விட்டுத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. கிராமத்திலிருந்து, மாநிலத் தலைநகரம் வரை, முறைகேடுகளும், மோசடிகளும், மக்கள் வாழ்க்கைத் தடங்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன.

புரளும் முறைகேடுகள்

புரளும் முறைகேடுகள்

முதியோர் ஓய்வூதியத் திட்டமா? லஞ்சம் இல்லாமல் ஓய்வூதியம் கிடைக்காது. ஏழை மகளிர் நிதி உதவித் திட்டங்களா? ஊழல் இன்றி உதவிகள் இல்லை . அரசுத் துறைகளில், கீழ் நிலையில் இருந்து மேல் நிலை வரை, லஞ்சம் கொடுக்காமல் நியமனமோ, ஓரிடத்தில் இருந்து விரும்பும் வேறோரிடத்திற்கு மாறுதலோ நிச்சயமாக இல்லை. அரசுப் பணிகளுக்கான டெண்டர்களில், ஆரம்பக் கட்டத்திலிருந்து இறுதிக் கட்டம் வரை, ஒப்பந்ததாரர்களுக்கும், அரசுக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம்; அந்த ஒப்பந்தத்தினால் உருளும் ஊழல் - லஞ்சம், புரளும் முறைகேடுகள் - மோசடிகள்.

ஏக்கப்பெருமூச்சு

ஏக்கப்பெருமூச்சு

நிர்வாகம் என்றாலே, நித்திய ஊழல், பூரண மோசடி என்று அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் புகுத்தியிருக்கும் புதிய இலக்கணம், தமிழக மக்களை விலங்கிட்டு, வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. வேதனை எப்போது விலகும்? துன்பங்கள் எப்போது தொலையும்? நள்ளிரவில் வந்த சுதந்திரம், அவ்வப்போது விடியலைக் காண்பதும், மீண்டும் இருள் சூழ்வதும் எப்போது மாறும்? நிரந்தர விடியல் விரைந்து வருமா? எனும் ஏக்கப் பெருமூச்சுடன் எந்தமிழ் மக்கள்!

அறம்

அறம்

அன்பையும் அறத்தையும் நீதியையும் நன்னெறிகளையும் போதித்து, மாணவ மாணவியரை நேர்வழிப்படுத்தி, தகுதிமிக்க குடிமக்களாக்கிட வேண்டிய கடப்பாடு கல்வித்துறைக்கு உண்டு. ஆனால் அந்தக் கல்வித் துறையையும் அ.தி.மு.க. ஆட்சி விட்டு வைக்கவில்லை , வளைத்து விட்டது. தமிழகத்தின் இன்றைய கல்வித்துறை, முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் கொள்கலனாகி வருகிறது. தமிழகப் பல்கலைக்கழகங்களில் மோசடி, பள்ளிகளில் முறைகேடு என்று அடிக்கடி வரும் செய்திகள், சமூக அக்கறை கொண்டிருப்போரின் மனதை நிச்சயம் சங்கடப்படுத்தும்.

முறைகேடுகள்

முறைகேடுகள்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், பணி நியமனங்களில் லஞ்சம் பெற்றார் என்ற புகாரில், துணைவேந்தர் கைது செய்யப்பட்டார். அதே பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தில், மாணவர்கள் செலுத்திய கட்டணத்தில் 28 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, தொடர்புடைய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், பதிவாளர், தொலைதூரக் கல்வி இயக்குநர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய பொறுப்புகளுக் கான நியமனத்தில் முறைகேடுகள் நடந்தன.

மதிப்பெண்

மதிப்பெண்

சென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீட்டில் முறைகேடுகள் நடந்தன. 2017 ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற பருவத் தேர்வில், விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பல மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் கிடைத்தது.

வெளிச்சம்

வெளிச்சம்

தகுதி இல்லாத மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றதாக புகார் கூறப்பட்டது. காவல்துறை விசாரணை நடந்தது. எளிதில் முறைகேட்டைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மறு மதிப்பீடு நடந்திருக்கிறது. ஒரு விடைத்தாள் மதிப்பீட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு, கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

தேர்ச்சி

தேர்ச்சி

அண்ணா பல்கலைக் கழக வெளிநாடுவாழ் மாணவர்களின் தேர்வு விடைத்தாள் திருத்துவதில் லஞ்சம் பெற்றதாகப் பேராசிரியர்கள் நான்கு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மிக முக்கிய நபர்களின் பிள்ளைகள், தோல்வி அடைந்த தேர்வுகளிலும், தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண்கள் போடப்பட்டது.

முதுநிலைப் பட்டம்

முதுநிலைப் பட்டம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்துவதில் சர்ச்சை , தகுதி இல்லாதவர்கள் நியமனம், போலிச் சான்றிதழ் மோசடி; மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வித் துறையில் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு போலி மதிப்பெண் சான்றிதழ்கள், பதிவு செய்து கொள்ளாதவர்களுக்கும் மதிப்பெண் சான்றுகள், மாணவர் சேர்க்கையில் முறைகேடு , முதுநிலைப் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முறைகேடு; நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக தொலைதூரக் கல்வி இயக்குநர் ரமேஷ் என்பவரே குற்றச்சாட்டு; வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப் பதாகத் தணிக்கை அறிக்கையிலேயே தகவல் ; என்று வரிசையாகப் பல்கலைக்கழகங்கள் மோசடிகளில் சிக்கித் திணறுகின்றன. இந்த முறைகேடுகளுக்கு விதி விலக்காக ஏதாவதொரு பல்கலைக்கழகமாவது மிஞ்சுமா என்று பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

மாணவர்கள்

மாணவர்கள்

2019 மார்ச் மாதம் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்தன. தேர்வு முடிவுகள் வெளி வந்ததும், மறு கூட்டலுக்கும் மறு மதிப்பீடு செய்யவும் மாணவர்கள் விண்ணப்பித்தனர். பல மாணவர்களுக்கு மதிப்பெண்களில் அதிகபட்சமாக 10 மதிப்பெண்கள் வரை வேறுபாடு வந்ததும், பெற்ற மதிப்பெண்களை விடைத்தாளின் முகப்பில் குறிப்பிடுவதில் தவறுகள் நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், மாணவர்களும், பெற்றோரும் மன அழுத்தத்திற்கு ஆளாயினர்.

ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தேர்வு வாரியம் முதன்முறையாக 'ஆன் லைன்' முறையில் நடத்தப்பட்ட கணினிப் பயிற்றுநர் நிலை - 1 பணிக்கான தேர்வில் பெரும் குளறுபடி என்று சொல்லப்பட்டது. அதன் காரணமாக, மறு தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது.

கல்வியாளர்கள்

கல்வியாளர்கள்

அ.தி.மு.க. ஆட்சியில், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளின் நியமனங்களிலும், தேர்வுகளிலும் நடக்கும் ஊழல் - முறைகேடுகள் குறித்து, இதுவரை எடுத்துரைத்தவை எல்லாமும், பெரிய ‘ஐஸ் கட்டியின் நுனிப் பகுதி மட்டுமே. 'கல்வி நீரோடையில் முதலைகள்' என்பது தொடரும் கதையாகி, சீரிய கல்வியாளர்களின் கண்களைக் கசக்கிக் கொண்டே
இருக்கிறது! என தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்லது.

English summary
Murasoli criticises ADMK government for corruption in Education department by saying In a Education water stream there are so much of crocodiles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X