இந்திய தேசிய லீக் தலைவருக்கு கொலைமிரட்டல்... பின்னணியில் ரூ.3 கோடி கடன்...?
விருதுநகர்: இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பஷீர் அகமதுவுக்கு தொழிலதிபர் ஒருவர் கொலைமிரட்டல் விடுத்ததாக போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை மண்ணடியில் உள்ள ராமசாமி தெருவில் கிரீன் பேலஸ் என்ற விடுதியை நடத்தி வருபவர் பஷீர் அகமது. இவர் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் பஷீர் அகமது தனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரசோழன் கிராமத்துக்கு சென்றிருந்த போது அங்கு அவரை சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
சென்னை கோனிமேடு பகுதியை சேர்ந்த கலிலுர் ரஹ்மான் என்பவரிடம் பஷீர் அகமது ரூ.3 கோடி கடன் பெற்றிருந்ததாகவும் அதில் ஒன்றரை கோடி ரூபாய் மட்டுமே திருப்பிக் கொடுத்துள்ளதாகவும், மீதி ஒன்றரைக் கோடியை தராமல் பஷீர் அகமது தாமதித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே வீரசோழன் கிராமத்தில் வைத்து மிரட்டப்பட்டதால் உள்ளூர் காவல் நிலையத்தில் பஷீர் அகமது புகார் அளித்தார். இதையடுத்து தொழிலதிபர் கலிலுர் ரஹ்மான் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
ஒரே சமூகத்தை சேர்ந்த இரண்டு முக்கியப் பிரமுகர்களுக்குள் எழுந்துள்ள இந்தப் பிரச்சனை சில இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கும் சென்றுள்ளது. இதனிடையே பஷீர் அகமது அளித்துள்ள புகார் மீதான உண்மை தன்மை பற்றியும் போலீஸ் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.