ஆடி சஷ்டியில் வேல் பூஜை - தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் முருகனுக்கு வழிபாடு - அரோகரா முழக்கம்
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதை கண்டித்து ஆடி சஷ்டி தினமான நேற்று மாலை தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளில் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவனம் படித்தனர்.
சென்னை: காக்க காக்க கனகவேல் காக்க... தாக்க தாக்க தடையற தாக்க என்று எங்கும் எதிரொலித்தது கந்த சஷ்டி கவசம். ஞாயிறு மாலை ஆடி சஷ்டி தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் வீடுகளில் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் படித்து தமிழ்கடவுள் முருகனை வணங்கினர். தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வசிக்கும் தமிழக மக்கள் முருகனை வழிபட்டனர். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் மாளிகையில் வேல் பூஜை செய்து வள்ளி தெய்வானை சமேத முருகனை வழிபட்டார்.
தமிழ்கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்துவதாக கூறி யுடுயூப்பில் பதிவிட்டனர் கருப்பர் கூட்டத்தினர். இதற்கு தண்டனையாக சிறைவாசம் கிடைத்துள்ளது. குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இதற்குப் பிறகுதான் முருகனை வணங்காதவர்களும் வணங்கத் தொடங்கி விட்டனர்.
முருகனை இழிவு படுத்தியவர்களை கண்டித்தும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்க வேண்டியும் ஆடி மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு ஞாயிறு மாலை தமிழகத்தில் பாஜகவினரும் இந்து மக்கள் கட்சியினரும் வேல் பூஜை செய்து முருகனை வணங்கினர்.
மக்களின் குறைதீர்க்க 'மை எம்.எல்.ஏ. ஓசூர்' டெலிகிராம் குழு தொடங்கப்பட்டது
முருகனுக்கு வேல் பூஜை
கடந்த 15 நாட்களுக்கு முன்பு வளர்பிறை சஷ்டி தினத்தில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் கந்த சஷ்டி கவசம் படித்தனர். நேற்றும் லட்சக்கணக்கானோர் வேல் பூஜை செய்து வணங்கினர். வேல் பூஜை முடிந்த பின்னர் வீட்டு வாசல்களில் நின்று கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை பக்தி பெருக்குடன் வழிபட்டனர்.
வேலும் மயிலுமாய் முருகன்
மழைக்கு நடுவிலும் தெலுங்கான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு தீபாராதனை காட்டி வழிபட்டார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆடி சஷ்டியை முன்னிட்டு அருள்மிகு முருகக் கடவுள் வழிபாடு ராஜ்பவன் வளாகத்தில் மழை பொழிந்து கொண்டு இருந்தபோதும் தீப ஆரத்தியை 'வேலோடு' மயிலோடு நின்று எம் முருகக்கடவுள் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி.
முருகன் செய்த வேல் பூஜை
பாஜக தமிழக தலைவர் முருகன் வீட்டிலும் வேல் பூஜை நடைபெற்றது ஏராளமானோர் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினர்.
கந்த சஷ்டி கவசம் டெல்லியில்
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் வீட்டில் முருகன் படம் வைத்து வேல் பூஜை செய்து வணங்கினர். இதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
நலம் பெற வழிபாடு
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக, பொல்லாதவரை பொடிப்பொடி யாக்கும், கந்தா குகனே கதிர்வேலவனே, பில்லி சூனியம் பெரும் பகை அகல, சரணம் சரணம் சண்முகா சரணம், வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க என்று உலக மக்கள் அனைவரும் நலம்பெறவும் கந்த சஷ்டி பாராயணம் மற்றும் வேல் பூஜை நடைபெற்றது என்று பதிவிட்டுள்ளார் கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் அர்ச்சகர் ஆனந்த ஆச்சாரியார்.
லாக்டவுன் நாளில் எதிரொலித்த அரோகரா முழக்கம்
ஞாயிறன்று நேற்று முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருந்தது. போக்குவரத்து எதுவும் இன்றி அமைதியாக இருக்க மாநிலத்தின் பல பகுதிகளில் கந்த சஷ்டி கவச பாடலும், கந்தனுக்கு அரோகரா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற முழக்கமும் எதிரொலித்தது. மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு அமைப்பாளர் சுவாமி சதா சிவானந்தா மற்றும் இந்து ஆலய பாதுகாப்பு குழு மேற்கு மாவட்ட துணை தலைவர் மதிவாணன் ஆகியோர் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபட்டனர்.