வேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்
சென்னை: முன்னாள் பிரதமர், ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட முருகன், தனது உண்ணாவிரதத்தை இன்று கைவிட்டார்.
முன்னாள் பிரதமர், ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முருகன்.
கடந்த 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் முருகன். இந்த நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி அன்று முருகன் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறை கூறியது. இதையடுத்து முருகன் தனிமைச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
சிறையில் இருந்து செல்போன் பறித்ததாக தம்மீது வேண்டுமென்றே வீண் பழி சுமத்தி, தனிமைச்சிறையில் அடைத்துள்ளனர், விடுதலைக்கு தடை போடுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார் முருகன்.
வேலூர் சிறை, பாதுகாப்பாக இல்லை என்பதால், தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்றவேண்டும் எனக் கோரி, கடந்த 11ம் தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டார் முருகன். 6 நாட்களாக உண்ணாவிரதம் தொடர்ந்தது.
இந்த நிலையில் முருகன் வழக்கறிஞர்கள், புகழேந்தி உள்ளிட்டோர், அவரிடம் சமாதானம் பேசினர். ஒருவழியாக, அதை ஏற்றுக் கொண்டு, முருகன் தனது உண்ணாவிரதத்தை இன்று கைவிட்டார்.