காசு வாங்கிட்டுதானே கச்சேரி பண்றீங்க.. அப்ப எனக்கும் பங்கு கொடுங்க.. இளையராஜா அதிரடி
ராயல்டி விவகாரம் தொடர்பாக இளையராஜா வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: "பணம் வாங்கறீங்க இல்லை.. சும்மாவா கச்சேரி பண்றீங்க.. என் பாட்டைதானே பாடறீங்க? அப்போ எனக்கு அதில் பங்கு இருக்குதானே?" என்று இசையமைப்பாளர் இளையராஜா கேட்டிருக்கிறார்.
இது சம்பந்தமாக காப்புரிமையை வலியுறுத்தி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் இளையாஜா தெரிவித்துள்ளதாவது:
என்னுடைய பாடல்களை என் முன் அனுமதியில்லாமல் பாட விரும்பும் இசைக்கலைஞர்கள் என்னிடம் முன் அனுமதி பெற்று அதற்குரிய விஷயங்களை முறைப்படி செய்துவிட்டு, அதன்பின் பாடவேண்டும். இல்லையென்றால் அது சட்டப்படி குற்றமாகும்.
இசைக்கலைஞர்கள் சங்கம்
அப்படி செய்வது தவறு என்பதை நீங்கள் உணரவேண்டும். இதனை மீறி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை ஐ.பி.ஆர்.எஸ்-ல் மெம்பராக இருந்தேன். நான் ஐ.பி.ஆர்.எஸ். இல் இப்போது உறுப்பினராக இல்லாத காரணத்தால் இதுவரை என் சார்பாக வசூலித்துக்கொண்டிருந்த ராயல்டி தொகையை இனி நமது தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் வசூலிக்கும்.
புரிந்து கொள்ளுங்கள்
அவர்களுக்கு நான் அந்த உரிமையை வழங்கியிருக்கிறேன். பாடகர்களும், பாடகிகளும் இதில் அடங்குவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோரும் இந்த விஷயத்தைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பாடுவதற்கு நான் இடைஞ்சல் செய்யவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ராயல்டி பாட்டுக்கு இல்லை
நீங்கள் வாங்குகின்ற பணத்துக்குத்தான் ராயல்டி தொகையே தவிர நீங்கள் பாடுகின்ற பாடலுக்கு ராயல்டி தொகை இல்லை. நீங்கள் இலவசமாகப் பாடினால், இலவசமாகப் பாடிவிடலாம். அதற்கு பணம்கொடுக்க தேவையில்லை. இதைச் சரியாக புரிந்துகொள்ளுங்கள். சும்மாவா கச்சேரி செய்கிறீர்கள்? பணம் வாங்குகின்றீர்கள் அல்லவா? பாட்டே என்னுடையது என்றபோது பங்கு எப்படி எனக்கு இல்லாமல் போகும்?
ஒரு முன்னோட்டம்
பங்கு என்பது ஒரு சின்ன தொகை. ஒரு பேருக்குத்தான் அதை கேக்கறது. சட்டப்படி இருக்க வேண்டும் என்பதற்குத் தான். நாளைக்கு வரும் தலைமுறைக்கு இது ஒரு பெரிய நடவடிக்கையாக இருக்கும்; முன்னோட்டமாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்'' இவ்வாறு இளையராஜா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.