திமுக வியூகத்துக்கு வேட்டு... முஸ்லிம் ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினிகாந்த்!
சென்னை: சிறுபான்மையினர் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யலாம் என திமுக காத்திருக்கும் நிலையில் முஸ்லிம் ஜமா அத் உலமாக்கள் சபையின் நிர்வாகிகள் ஓரிரு நாட்களில் ரஜினிகாந்தை சந்திக்க உள்ளனராம். இது திமுகவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறதாம்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகள்தான் திமுகவுக்கு ஆகப் பெரும் நம்பிக்கையாக இருந்து வருகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சிறுபான்மையினர் வாக்குகள் தங்களுக்கே கிடைக்கும். சிறுபான்மையினரின் 12% வாக்குகள் மொத்தமாக நமக்குக் கிடைத்தால் ஆட்சி நிச்சயம் என்கிற நினைப்பில் இருக்கிறது திமுக.
இதற்காகவே சிறுபான்மையினர் விவகாரங்களில் திமுகவினர் முனைப்பு காட்டுகிறது. சிறுபான்மையினர் பிரச்சனைகளில் அனைத்து கட்சிகள், இயக்கங்களையும் திமுக ஓரணியில் திரட்டி வைத்திருக்கிறது. அத்துடன் ரஜினிகாந்துக்கு சிறுபான்மையினர் ஆதரவு இருக்கிறது என்கிற கணிப்பில் அவரை பாஜக பக்கம் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக.
இதனை உணர்ந்துதான் எனக்கு காவி சாயம் பூச பார்க்கிறார்கள்; எனக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். அத்துடன் டெல்லி வன்முறை விவகாரத்தில் மத்திய பாஜக அரசை விமர்சித்தும் பேசினார் ரஜினிகாந்த். இதை ரசிக்காத திமுகவுக்கு இப்போது ரஜினி தரப்பு இன்னொரு வேட்டு வைத்திருக்கிறது.
Recommended Video
சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்திடம் தமிழ்நாடு ஜமாஅத் உலமா சபையின் மூத்த நிர்வாகி ஒருவர் பேசியிருக்கிறார். அப்போது, ஜமாஅத் உலமா சபையின் மூத்த நிர்வாகிகள் ரஜினிகாந்தை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை ரஜினிகாந்த் உடனே ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்.
ஓரிரு நாட்களில் ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகள் ரஜினிகாந்தை சந்தித்து பேச இருக்கிறார்கள். முஸ்லிம் வாக்காளர்களிடம் செல்வாக்கு செலுத்தக் கூடியதாக ஜமா அத் உலமா சபை இருக்கிறது. இந்த சபையின் நிர்வாகிகள் ரஜினிகாந்தை சந்திக்கும் தகவல் கிடைத்ததும் திமுக தலைமை ஜெர்க் ஆனதாம். முஸ்லிம் வாக்குகள் பிரிந்து போகுமானால் தங்களது வெற்றிக்கு பங்கம் வருமே என பதைபதைத்துக் கொண்டிருக்கிறதாம் அறிவாலயம்.