விஸ்வரூபம் எடுக்கும் வண்ணாரப்பேட்டை தடியடி.. சென்னை உள்பட தமிழகத்தில் இஸ்லாமியர்கள் போராட்டம்
Recommended Video
சென்னை: சென்னையில் வண்ணாரப்பேட்டையில் போலீஸார் தடியடியை கண்டித்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று மாலை முதல் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தை தொடங்கின.
இதில் டெல்லி ஷாகீன்பாக் போல பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் எச்சரித்தனர். அப்போது இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
120 பேர் கைது
அப்போது காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதாகவும் சிலரை அடித்து உதைத்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதனிடையே 120 பேரை போலீஸார் கைது செய்தனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் கத்திப்பாரா சந்திப்பு முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விழுப்புரம்
இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து திருவண்ணாமலை, வந்தவாசி, மதுரை, நெல்பேட்டை, கோரிப்பாளையம், திருப்பூர், தாராபுரம், திருவள்ளூர், செங்குன்றம் திருச்சி பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அது போல் சென்னை வண்ணாரப்பேட்டை, பிராட்வே பகுதியிலும், மதுரை ஜின்னா திடல், கரூர், நாகை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் விடிய விடிய ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மறியல்
இதனால் பதற்றம் எழுந்துள்ளது. இதனிடையே இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களை அழைத்து சென்னை காவல் துறை கமிஷனர் விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி கார்னரில் இஸ்லாமியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாக்குதல்
அது போல் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடத்திய காட்டுமிராண்டி தாக்குதலை கண்டித்து தேனி பெரிய பள்ளிவாசலின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் போராட்டக்காரர்கள் மீது போலீஸாரின் அராஜக போக்கை கண்டித்து குன்னூரில் வணிகர்கள் கடைகளை அடைத்துவிட்டனர். அது போல் திருச்செந்தூரிலும் முஸ்லீம்கள் போராட்டம் நடத்தினர்.
நெல்லை
கும்பகோணம் மாவட்டத்தில் தபால் நிலையம் வெளியே 1000-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். அது போல் நெல்லை மேலப்பாளையத்திலும் போராட்டம் நடந்தது. ராமநாதபுர மாவட்டத்தில் சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னையில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இணை ஆணையர் விஜயகுமாரி, இரு பெண் காவலர்கள், ஒரு உதவி ஆய்வாளர் ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேரையும் சென்னை ஆணையர் விஸ்வநாதன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.