பெரும் சிக்கலில் எச்.ராஜா.. முஸ்லீம்களை மத வெறியர்களாக சித்தரிப்பதா.. கடும் நடவடிக்கை எடுக்க புகார்
ராமநாதபுரம் கொலை சம்பந்தமாக சர்ச்சை கருத்து கூறிய எச்.ராஜா மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: "முஸ்லீம்களை மத வெறியர்கள்" என சித்தரித்து அருண்பிரகாஷ் என்பவர் கொலை வழக்கில் கருத்து தெரிவித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போட்ட ட்வீட், சர்ச்சையுடன் சேர்த்து பரபரப்பையும் கிளப்பி வருகிறது. இதையடுத்து, மதக் கலவரத்தை தூண்ட எச். ராஜா முயல்வதாக கூறி அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி காவல் ஆணையரிடம் புகார் தரப்பட்டுள்ளது.
நடந்த சம்பவம் என்ன?
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் அருண் பிரகாஷ்... இவர் ஒரு கூலி தொழிலாளி.. கடந்த திங்கட்கிழமை சாயங்காலம், தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர் யோகேஸ்வரனை சந்திக்க சென்றுள்ளார்.. இருவரும் தெருமுனையில் பேசி கொண்டிருந்தபோது, திடீரென பைக்கில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், அருண் பிரகாஷையும், யோகேஸ்வரனையும் சரமாரியாக வெட்டி உள்ளனர்... இதை பார்த்த பொதுமக்கள், தாக்குதல் நடத்திய கும்பலை விரட்டி பிடிக்க முயன்றனர்.. ஆனால் அந்த கும்பல் பைக்கிலேயே தப்பி பறந்துவிட்டது.
இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்... ஆனால், கொஞ்ச நேரத்திலேயே அருண் இறந்துவிட்டார்.. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு, குற்றவாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை பெற மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறகு போலீசார் விரைந்து வந்து, அவர்களை சமாதானப்படுத்தி சடலத்தை அவர்களிடம் தந்தனர்.. உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி தந்தனர்.. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் முகமது ரியாஸ், காமாட்சி, சுரேஷ், சாகுல் ஹமீது உள்ளிட்டேரை கைது செய்தனர்.. லெப்ட் சேக் என்பவர் உள்ளிட்ட மேலும் சிலரையும் தேடி வந்த நிலையில், ஷேக் அப்துல் ரகுமான் (20), சதாம் உசேன் (21), காசிம் ரஹ்மான்(20), முகமது அஜீஸ் (20) ஆகிய நால்வரும் திருச்சி மாவட்டம், லால்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயபாரதி முன்னிலையில் சரணடைந்தனா்.
இதனிடையே, ஒரு சிலர் இந்த கொலையில் மதத்தை கலக்க ஆரம்பித்தனர். கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லெப்ட் ஷேக் ஒரு வருடத்திற்கு முன்பு, இந்து முன்னணியின் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினரான திருப்புல்லாணி சக்திவேல் என்பவரை கொலை செய்ய முயன்றிருக்கிறார்.. அது சம்பந்தமாகவும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இதை வைத்து இணைத்து, இதை மத ரீதியிலான கொலை என்று தகவல் பரப்ப ஆரம்பித்தனர்.
இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துக் கொண்டது. குறிப்பாக, பாஜக தேசிய செயலாளரும், மூத்த தலைவருமான எச்.ராஜா இதை பெரிதுப்படுத்தினார்.. இது சம்பந்தமாக ஒரு ட்வீட்டும் போட்டிருந்தார்.. இதில், "ராமநாதபுரம் கள்ளர் தெருவை சேர்ந்தவர் அருண் பிரகாஷ்.. சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த சேட்(எ) லெப்ட் சேக் மற்றும் 10 முஸ்லீம் மதவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். இவர்களால் தாக்கப்பட்ட யோகேஷ் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று நேற்று முன்தினம் பதிவிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து தமிழக பாஜகவும் கூட பயங்கரவாதிகளால் அருண் பிரகாஷ் படுகொலை செய்யப்பட்டதாக தனது டிவிட்டரில் போட இந்து அமைப்பினர் இந்த விவகாரத்தில் தங்கள் கவனத்தை திசை திருப்பினர்.. கிட்டத்தட்ட மதக் கலவரம் ஏற்படும் வகையிலான முறையில் இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவ ஆரம்பித்தது. இதையடுத்து ராமநாதபுரம் காவல்துறை களத்தில் இறங்கியது. ஒரு விரிவான விளக்கத்தை அது தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டது.
ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் இடமாற்றம்- புதிய எஸ்பியாக கார்த்திக் நியமனம்
அந்த டிவீட்டில், "இராமநாதபுரம் மாவட்டத்தில் வசந்தம் நகரில் 31.08.2020-ம் தேதி அன்று நடந்த அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை. வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இப்படிக்கு, இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ராமநாதபுரம் கொலை- மத மோதலை தூண்டும் எச்.ராஜா உட்பட பாஜகவினர் மீது நடவடிக்கை தேவை: கே.பாலகிருஷ்ணன்
இதன் மூலம் இந்தக் கொலை மத ரீதியிலானது அல்ல, இரு கோஷ்டிகளுக்கு இடையிலான மோதல் என்று தெரிய வந்தது. எச்.ராஜாதான் இப்படி ட்வீட் போட்டிருந்தார் என்றால், மூத்த தலைவர் வானதி சீனிவாசனும் தன் பங்குக்கு வந்து ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், "இம்மாதிரியான வழக்குகளில் தண்டனை கிடைக்க கால தாமதமாவதால் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் தைரியமாக இதை செய்கின்றனர். தமிழக காவல்துறை மத பயங்கரவாத குழுக்களை அழிக்க சிறப்பு கவனம் கொடுக்க வேண்டும். உடனடி நடவடிக்கையே இப்போது தேவை என்று அவர் கூறியிருந்தார்.
இவர்களின் ட்வீட்டை பலரும் ஷேர் செய்ய தொடங்கினார்கள்.. "அருண்பிரகாஷைக் கொன்றது மதவெறியர்கள்" என்றும் "இந்துக்களின் மீது நடத்தும் அக்கிரமம்"என்றும் அதற்கு பலர் கமெண்ட்டுகளை செய்ய ஆரம்பித்தனர்.
ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் மாற்றம்- முதல்வர் எடப்பாடியா? ஹெச் ராஜாவா? ஜவாஹிருல்லா கண்டனம்
ஆனால் ராமநாதபுரம் போலீஸார் கூறிய விளக்கத்தால் இத்தனை பிரச்சாரமும் தவறானது என்று தெரிய வந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். இந்த நிலையில் எச். ராஜா மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் மீது திருச்சி காவல்துறை ஆணையரிடம் யுனிவர்ஸல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் ரபீக் புகார் அளித்துள்ளார்.
அதில், அமைதிப் பூங்காவான தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் எச்.ராஜா தொடர்ந்து பேசி வருகிறார். அவரை கைது செய்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்ற நாள் முதல் ரவுடிகள், கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்து வருகின்றனர். இதன் மூலமாக தேர்தலை சீர்குலைத்து விடுவார்களோ? அல்லது மத வன்முறையை ஏற்படுத்தி விடுவார்களே என்ற பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
எனவே காவல்துறையினர், உளவுத் துறையினர் தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமான நடவடிக்கையை போலீசார் இனி மேற்கொள்வார்கள் என தெரிகிறது. வரம்பு மீறி, இப்படி சர்ச்சையை உண்டாக்கும் விதமாக பேசினால் என்ன ஆகும் என்று, அன்று கோர்ட்டில் எச்.ராஜாவுக்கும், இன்று எஸ்வி சேகருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். எனினும், நாளுக்கு நாள் தமிழக பாஜக எல்லை மீறி நடந்து வருவதாகவே மக்கள் கருதத் தொடங்கியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் தெரிவித்துள்ள சில கருத்துக்கள்:
"சமூக ஒற்றுமையை காத்திட உண்மைத் தகவலை உலகறியச் செய்த குற்றவாளிகளைப் பிடித்து தக்க தண்டனை வழங்க முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் நெஞ்சுரம் மிக்க எங்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு மிக்க நன்றி! சட்டம் தன் கடமையை செய்யும் குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டனை கிடைத்தே தீரவேண்டும் தண்டனைகளில் மதமோ மார்க்கமோ ஒன்று கிடையாது. இராமநாதபுரம் காவல் ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள் கூடிய நன்றியும்.
எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் குற்றவாளிகளை குற்றவாளியாக மட்டுமே பார்க்கவேண்டும் அவர்களுக்கு மதச்சாயம் பூசக் கூடாது. எந்த மதமும் குற்றங்கள் செய்ய தூண்டுவதில்லை மாறாக நன்மைகள் செய்து நன்றாக வாழதான் அறிவுறுத்துகிறது. நாம் அனைவரும் சகோதரர்கள்.
குற்றவாளிகள் எச்சமூகத்தை சேர்ந்தோராயினும் நீதிவிசாரணையில் கடுமையான தண்டனை வழங்குங்கள்... (Even out of judicial) அதுவே பாதிக்கப்பட்டோருக்கான நீதி & பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களை இனம் கண்டு அறிவுறுத்தியமைக்கு நன்றி. மதச்சாயம் பூச நினைப்பவர்களை முதலில் தண்டியுங்கள்.. உண்மையை தெளிவு படுத்திய இராமநாதபுரம் காவல்துறைக்கு மிக்க நன்றி. உயர்திரு.காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு மிக்க நன்றி.. அய்யா நேர்மையான விசாரணை நடத்திய உண்மையை வெளியே கொண்டு வந்த அனைவருக்கும் மிக்க நன்றி" என்று மக்கள் ராமநாதபுரம் காவல்துறைக்கு உளமார நன்றி கூறி வருகின்றனர்.