டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தங்களை தனிமைப்படுத்த வேண்டும்.. தலைவர்கள் அறைகூவல் அவசியம்: ஈஸ்வரன்
சென்னை: டெல்லி இஸ்லாமியர் மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் தங்களை தாங்களே அடையாளப்படுத்திக் கொண்டு தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும். அனைத்து தலைவர்களும் இதற்கான அறைக்கூவலை விட வேண்டும், என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகமாகிறது. டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகத்துக்கு திரும்பியவர்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
மாநாட்டிலே கலந்து கொண்டவர்களில் 1100 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள். டெல்லி மாநாடு முடிந்து திரும்பிய அனைவரும் தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு சென்று இருக்கிறார்கள். தமிழக சுகாதாரத்துறை தேடி கண்டுபிடித்து தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இன்னும் 500 பேருக்கு மேல் அடையாளம் காணப்படவில்லை.
ஆபத்து.. டெல்லி சென்று வந்த 616 பேர் எங்கே.. செல்போனும் ஸ்விட்ச் ஆப்.. தீவிர தேடுதலில் அதிகாரிகள்
மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் ஒத்துழைப்பு கொடுத்து தாங்களாக முன்வர வேண்டும். சுகாதாரத்துறை செயலாளர் அழைப்பு விடுத்திருக்கின்றார். அவர்களாக முன் வந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளவில்லை என்றால் அவர்கள் அனைவரும் தாங்கள் அறியாமலேயே குடும்பத்தில் இருக்கின்ற அனைவருக்கும் கொலைக்கார கொரோனாவை பரப்பி விடுவார்கள்.
அடையாளம் காணப்படாமல் இருக்கின்ற 500 -க்கும் மேற்பட்டவர்கள் அவர்களாக முன்வராவிட்டால் முழுமையாக கண்டுப்பிடிக்க முடியாது. இந்த பணியில் அரசாங்கம் மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அறைகூவல் விடுத்து அவர்களை அழைக்க வேண்டும்.
குறிப்பாக இஸ்லாமிய தலைவர்கள், இஸ்லாமிய கூட்டமைப்பை சார்ந்தவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தங்களை தாங்களே அடையாளப்படுத்தி கொள்ள வேண்டுமென்ற அழைப்பை விட வேண்டும். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவில்லை என்றால் நாம் எல்லோரும் பாதிக்கப்படுவோம் என்பதை உணர்ந்து அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.