அருமை.. பாக்கியலட்சுமிக்கு அட்சதை போட்ட பர்தாக்கள்.. வியக்க வைத்த வண்ணாரப்பேட்டை வளைகாப்பு!
வண்ணாரப்பேட்டையில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது
சென்னை: பர்தா அணிந்த பெண்கள் பாக்கியலட்சுமிக்கு அட்சதை போட்டு, வளையல்களை மாட்டி.. சீமந்தம் செய்து முடித்துள்ளனர்.. வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் நடந்த இந்த வளைகாப்பு நிகழ்ச்சியின் தாம்பூலப் பையில் "இஸ்லாமியர்கள் அனைவரும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளே" என்ற வாசகத்தை அச்சிட்டு எல்லோருக்கும் வழங்கியுள்ளனர்.
சிஏஏவுக்கு எதிராகு வண்ணாரப்பேட்டையில் சென்னையில் ஒரு ஷாகின்பாஃக்' என்ற முழக்கத்துடன் போராட்டம் நடத்தப்பட்டது.. இதில், கடந்த 14-ம் தேதி போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி வரை சென்றது.. அதனால் இந்த போராட்டம் தொடர் போராட்டமாக உருவெடுத்தது.
வண்ணாரப்பேட்டைக்கு ஸ்டாலின் வந்தாரா.. இஸ்லாமிய சகோதரர்கள் திமுகவை புறக்கணிக்க வேண்டும்.. என்று பாஜக தரப்பில் விமர்சனங்கள், கண்டனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறார்கள்.. ஆனால் இன்னொரு பக்கம், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்களுக்கு அப்பகுதியில் உள்ள இந்து மக்கள் சாப்பாடு சமைத்து கொடுத்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகினற்னர்.
கடந்த 17-ம் தேதி இதே போராட்டக்களத்தில் இஸ்லாமிய முறைப்படி ஒரு திருமணம் நடந்தது... இந்த பெண்ணை எனக்கு பிடித்திருக்கிறது.. இந்த மாப்பிள்ளை எனக்கு பிடித்திருக்கிறது... ஆனால் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் எங்களுக்கு பிடிக்கவில்லை" என்று சொல்லி களத்திலேயே கல்யாணத்தை முடித்தனர்.
இந்நிலையில் போராட்டத்தின் 13 வது நாளான நேற்று மேடையிலேயே இந்து மதத்தை சார்ந்த பாக்கியலட்சுமி என்ற கர்ப்பிணி பெண்ணிற்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.. கர்ப்பிணி பெண்ணிற்கு இந்து முறைப்படியே இந்த சீமந்த விழா நடந்தது.. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய பெண்கள், பாக்கியலட்சுமிக்கு வளையல் அணிவித்தனர்.
அக்ட்சதை தூவி ஆசிர்வாதம் செய்தனர்... இந்து பெண்களும், இஸ்லாமிய பெண்களும் ஒன்றாக சேர்ந்து செல்பி எடுத்து கொண்டனர்... சீமந்த விழாவில் வழங்கப்பட்ட தாம்பூலப் பையில் "இஸ்லாமியர்கள் அனைவரும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளே" என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது.. எல்லோருமே அந்த வாசகத்தை திரும்ப திரும்ப படித்து பார்த்து நெகிழ்ந்தனர்.
என்னதான் மதவாத வன்முறையை ஏற்படுத்தி அதன்மூலம் பாஜக தரப்பினர் சிலர் குளிர்காய நினைத்தாலும்... பட்டுப்புடவைகளும், பர்தாக்களும் இறுக்கமாக கைகோர்த்து சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் எப்போதுமே வெளிக்காட்டிக் கொண்டுதான் இருப்பார்கள்!