சிஏஏ சட்டத்திற்கு எதிராக.. வண்ணாரபேட்டை, மண்ணடி, மதுரையில் இரவிலும் தொடரும் போராட்டம்
சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, சென்னை மண்ணடியில், இஸ்லாமியர்கள் இரவும் தொடர்ச்சியாக தர்ணா நடத்தி வருகிறார்கள். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கணிசமாக பங்கேற்றுள்ளனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னை, வண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு நடந்த இஸ்லாமியர் போராட்டத்தின்போது போலீஸ் மற்றும் போராட்டக்கார்கள் நடுவே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, தமிழகம் முழுக்க இஸ்லாமியர்கள் இரவோடு போராட்டத்தில் குதித்தனர்.
எனவே மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், முஸ்லீம் அமைப்பு தலைவர்களை சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்ய்பப்டடனர். போராட்டத்தை இஸ்லாமிய அமைப்புகள் முடித்துக் கொண்டன.
இந்த நிலையில், இன்று இரவு முதல் மண்ணடியில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சுமார் 50 பேர் அமர்ந்து போராட்டம் நடத்திய பிறகு, அவர்கள் எழுந்து போனதும், அதே அளவுக்கான மக்கள் வந்து போராட்ட களத்தில் அமர்கிறார்கள். அதாவது ரில்லே போராட்டம் பாணியில் இப்போராட்டம் நடக்கிறது.
அதேநேரம், போலீசார், போராட்டக்காரர்களை கலைந்து போகச் சொல்லவில்லை. மாறாக வீடியோக்களில் நடப்பதை பதிவு செய்தபடி இருப்பதை பார்க்க முடிகிறது. பஸ்களில் வந்த போலீசாரும், பஸ்களிலேயே அமர்ந்து நடப்பவற்றை பார்த்து வருகின்றனர்.
இதேபோல வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆயிரக்கணக்கானோர் இன்றும் இரவில் போராட்டம் நடத்தி வருகிரார்கள். சிஏஏ சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுக்கிறார்கள்.
இதேபோல மதுரை ஜின்னா திடல் பகுதியிலும் இரவு போராட்டம் தொடர்கிறது. சென்னை தடியடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.