சிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக தொடரும் முஸ்லீம்கள் போராட்டம்
Recommended Video
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு தொடங்கிய முஸ்லீம்களின் போராட்டம் 6வது நாளாக இன்று தொடர்கிறது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் கண்ணன் ரவுண்டானா அருகில் கடந்த 14-ந்தேதி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு முஸ்லிம்கள் சிஏஏவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தடியடி திடீரென நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து போலீசாரின் தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற வலியுறுத்தியும் வண்ணாரப்பேட்டை பகுதி முஸ்லிம்கள் தடியடி நடந்த 14-ந்தேதி இரவு முதலே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதில் இருந்தும் சிஏஏவுக்கும் எதிராகவும் தடியடியை கண்டித்தும் அதன்பிறகு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் 6-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களுக்கு அவ்வப்போது உணவு, குடிநீர், சர்பத், பழங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களே குழுவாக ஒருங்கிணைந்து வழங்கி வருகிறார்கள்.
போராட்டத்தில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் விதமாக போலீசார் சார்பில் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளார்கள். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாத வகையில் போராட்டக்குழுவினர் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். முன்னதாக இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.