கொரோனா நோயாளிகளுக்கு என்ன உணவு தருகிறீர்கள்...? எவ்வளவு செலவாகிறது..? -முத்தரசன் கேள்வி
சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு என்ன உணவு தரப்படுகிறது அதற்கு எவ்வளவு செலவாகிறது என்பதை விவரமாக பட்டியலிட்டு அரசு வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு உணவு தயாரிக்க தினசரி ரூ.25 கோடி வரை செலவாகிறது என்பதில் சந்தேகம் எழுவதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சட்டம் ஒழுங்கு சரியில்லை...காவலர் கொலை...எதிர்க்கட்சிகள் மவுனம் ஏன்...நீதிமன்றம் விளாசல்!!
நம்பமுடியவில்லை
கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு தயாரிக்க தினசரி ரூ.25 கோடி வரை செலவாகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றில் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம், குறிப்பாக சென்னை ராஜிவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கேட்டறிந்த வகையில் முதலமைச்சரின் கணக்கின் மீது ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.
2 இட்லி ஒரு ஊத்தப்பம்
ராஜிவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் காலையில் 2 இட்லி, ஒரு சிறிய ஊத்தப்பம், மதியம் காய்கறி கூட்டு, சிறிது சாம்பார், சிறுசிறு அப்பளம் ஆகியவை உள்ளடங்கிய அளவு சாதம், இரவு மீண்டும் 2 இட்லி, சிறிய ஊத்தப்பம் ஒன்று என வழங்கப்படுவதாக தெரிகிறது.
முத்தரசன் சாடல்
வேறு சில பகுதிகளில் முட்டையும், பாலும் கூடுதலாக வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். இவை அனைத்தையும் சேர்த்துக் கணக்கிட்டாலும் முதலமைச்சரின் கணக்கு, பொருந்தாக் கணக்காகவே வருகிறது. கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கையில் நிதித் தவறுகளும், ஊழலும் நடைபெறுவதாக புகார்களும் எழுந்துள்ளன.
விவரம் வெளியிடுக
இந்தச் சூழ்நிலையில் கொரோனா நோய் சிகிச்சை பெறுவோருக்கு, வழங்கப்படும் உணவு விபரங்கள், அதன் விலை மதிப்பு ஆகியவற்றை தெளிவாக பட்டியலிட்டு, பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். இவ்வாறு முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.