தமிழகத்தில் மட்டுமில்லை.. இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் ஆட்சி ஒரு நாள் வந்தே தீரும்.. முத்தரசன் உறுதி!
சென்னை: பாஜக தவிர அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய ஒரே கொள்கை பொதுவுடைமை கொள்கை, தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கம்யூனிஸ்ட் ஆட்சி ஒரு நாள் வந்தே தீரும் என முத்தரசன் தெரிவித்தார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பணியை தொடங்கிவிட்டது. மாவட்ட குழு கூட்டங்கள், மாநில குழு கூட்டங்கள் நடத்தி தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டுவிட்டது.
எந்தெந்த மாவட்டத்திற்கு எந்த மாதிரியான வேலைகள் என்பதெல்லாம் அறிவுறுத்தப்பட்டு அமைதியாக நடைபெற்று வருகிறது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை.
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர்
பேச்சுவார்த்தை
பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும். ஒவ்வொரு கட்சியும் குழுக்கள் அமைத்து அந்த குழுக்கள் வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெறும். இன்னமும் அந்த குழுக்கள் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்.
காலமும் கனியவில்லை
திமுக கூட்டணியில் எத்தனை தொகுதியை எதிர்பார்க்கிறோம் என்பதை இப்போது சொல்ல முடியாது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம் இருக்கும். இந்த முறை எத்தனை கேட்பது என்பது குறித்து நாங்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை. காலமும் கனியவில்லை.
திமுக வலியுறுத்தவில்லை
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு எங்கள் கட்சியை திமுக வலியுறுத்தவில்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற முறையில் கதிர் அரிவாள்தான் எங்கள் சின்னம். இந்த சின்னத்தில்தான் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறோம் . வரும் தேர்தலிலும் அதே சின்னத்தில்தான் போட்டியிடுவோம். சின்னம் பிரச்சினை எங்கள் கட்சிக்கு பொருந்தாது.
ஆதரவு
வெற்றி பெற எல்லோருடைய ஆதரவும் தேவை. ரஜினியுடைய ஆதரவு என்பது மட்டுமல்ல. தமிழக மக்களுடைய ஆதரவு எங்களுக்கும் எங்கள் அணிக்கும் தேவை. புதுக்கோட்டையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினியிடம் நீங்கள் ஆதரவு கேட்பீர்களா என கேட்டார்கள். அதற்கு நான், ரஜினி மட்டுமில்லை. தமிழக மக்களின் ஆதரவை கேட்போம் என தெரிவித்தேன். இப்போதும் அதையேதான் சொல்கிறேன்.
ஓராண்டு காலம்
பொங்கல் பரிசு தொகுப்பும் லஞ்சமும் ஒன்றா , ஏன் இப்படி ஒரு விமர்சனத்தை முன் வைக்கிறீர்கள் என கேட்கிறீர்கள். அதாவது தமிழகத்தில் ஏராளமான பாதிப்புகள் உள்ளன. கிட்டதட்ட ஓராண்டு காலம் நாட்டு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தொழில், விவசாயம், வணிகம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்படாதவர்கள் என யாரையும் சொல்ல முடியாது.
புலம்பெயர்ந்த
சாதாரண கூலி வேலை செய்யும் மக்களுக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அது போல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைப்பாடு என்பது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. மத்திய அரசு ரூ 7000 த்தை நிவாரணமாக வழங்க வேண்டும் என கேட்டோம். இந்த கோரிக்கைகள் எல்லாம் பரிசீலிக்கப்படவே இல்லை.
2500 ரூபாய் நிவாரணம்
ஒரு 1000 ரூபாயை கொடுத்துவிட்டு உணவு பொருளையும் கொடுத்துவிட்டு அத்துடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக தமிழக அரசு கைவிரித்துவிட்டது. மத்திய அரசும் ஒத்தை ரூபாயை கூட நிவாரணமாக வழங்க முன்வரவில்லை. இந்த சூழலில் பொங்கலுக்கு ரூ 2500 நிவாரணம் அறிவித்திருப்பதுதான் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற பழமொழியை குறிப்பிட்டேன். நான் சொன்னது மிகச் சரியானது.
விருப்பம்
சசிகலாவின் வருகை தமிழக அரசியல் களத்தில் மாற்றத்தை உருவாக்குமா என கேட்கிறீர்கள். சசிகலா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். ஏற்கெனவே 4 ஆண்டுகள் சிறையில் இருந்தார். விடுதலையாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சற்று கவலையாக இருந்தது.
பொதுச் செயலாளர்
தற்போது உடல்நலம் தேறியிருக்கிறார். படிப்படியாக அவர் உடல்நலம் தேற வேண்டும் என விரும்புகிறேன். அவரது வருகையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிமுகவிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். அந்த கட்சியினுடைய பொதுச் செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுக் குழு கூடி அதிகாரப்பூர்வமாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
பொதுச் செயலாளர் தேர்வு
பொதுக் குழுவிற்கு சசிகலா வராத நிலையில் அவரை பொதுச் செயலாளராக தேர்வு செய்து நேரடியாக வீட்டிற்கே சென்று நீங்கள்தான் கட்சியை வழி நடத்த வேண்டும் என பொதுக் குழு தீர்மானத்தை சசிகலாவிடம் கொடுத்தனர். தற்போது அவர் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள நிலையில் விளைவுகள் ஏற்படுமா இல்லை ஏற்படாதா என்பது குறித்து அதிமுகதான் விளக்கமளிக்க வேண்டும்.
விஷயம்
தேமுதிக தனித்து போட்டி என கூறியிருப்பது குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும். ஒரு கட்சி தனித்து போட்டியிடுகிறதா கூட்டணி அமைக்கிறதா என்பது அந்தந்த கட்சி முடிவு செய்யக் கூடிய விஷயமாகும். அவர்களுடைய கருத்தை சொல்கிறார்கள். அது எதற்காக என்பது எனக்கு தெரியாது.
உதயசூரியன்
அதிமுகவில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். தனித்து போட்டியிடுவதாகவும் சொல்கிறார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஏன் தயக்கம் காட்டுகிறோம் என கேட்கிறீர்கள். எங்கள் கட்சியின் சின்னமான கதிர் அரிவாள் சின்னத்தை 1952 முதல் பயன்படுத்தி வருகிறோம். மக்கள் மத்தியில் அறிமுகமான சின்னம். அந்த சின்னம் இருக்கும் போது நாங்கள் இன்னொரு சின்னத்தில் போட்டியிட வேண்டியது இல்லை.
போராட்டம்
நீங்கள் கேட்கும் இந்த கேள்வி எங்கள் கட்சிக்கு பொருந்தாது. திமுக இதுவரை எந்த தேர்தலிலும் எங்களிடம் அது போல் கேட்டது கிடையாது. தமிழகத்தில் மட்டும் இல்லை, இந்திய முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி ஒரு நாள் வந்தே தீரும். உலகத்தில் ஆகச்சிறந்த கொள்கை என்பது பொதுவுடைமை சமுதாயம்தான். எல்லாரும் அதற்காகத்தான் பாடுபடுவதாகவும் போராடுவதாகவும் சொல்கிறார்கள். பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் பொதுவுடைமை சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நிலையாக நிலைத்து நிற்கக் கூடியது பொதுவுடைமை கொள்கைதான் என்றார்.