800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கோரிக்கை
சென்னை: தம்முடைய வாழ்க்கை குறித்த படமான 800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக் கொள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாற்றை மையமாக கொண்டது 800 திரைப்படம். இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஈழத் தமிழர் பிரச்சனையில் சிங்களருக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் முரளியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என உலகத் தமிழர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் விஜய்சேதுபதி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் தம்முடைய வாழ்க்கை வரலாறு தொடர்பான 800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக் கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முத்தையா முரளிதரன் அறிக்கையில் கூறி உள்ளதாவது:
முரளிதரன் அறிக்கையை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகினார் நடிகர் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதிக்கு அழுத்தம்
எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை.
விஜய்சேதுபதி விலக வேண்டுகோள்
அதுமட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலைபயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்துவிடவில்லை. அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது.
நிச்சயம் படம் வரும்
இத்திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன். அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் நன்றி
இந்த சூழ்நிலையில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி விலகலா?
முத்தையா முரளிதரனின் இந்த அறிக்கை வெளியான உடனேயே இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார் நடிகர் விஜய்சேதுபதி. மேலும் அந்த பதிவில் நன்றி வணக்கம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் முத்தையா முரளிதரன் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுகிறாரா? இல்லையா? என்பது தெளிவாக தெரியவில்லை. இதனை விஜயசேதுபதி அறிவித்தால்தான் தெளிவு கிடைக்கும்.