"சக்கர நாற்காலி.." கொந்தளித்த திமுக.. கருணாநிதி பற்றி பேசவில்லை.. கமல்ஹாசன் விளக்கம்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீது மிகுந்த மரியாதை இருப்பதாகவும் அவரது சக்கர நாற்காலி மற்றும் முதுமை குறித்து விமர்சிக்கவில்லை என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சி நான்காம் ஆண்டு தொடக்க விழா தாம்பரத்தில் நடைபெற்றது.
இதில், கமல்ஹாசன் பேசுகையில், ஆரோக்கியமாக இருக்கும்போதே மக்கள் பணியாற்ற விரும்புவதாகவும், சக்கர நாற்காலியில் வந்து யாரையும் தொந்தரவு செய்யமாட்டேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
கொந்தளிப்பு
கமல் பேசியது, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முதுமையை கேலி செய்வதாக இருப்பதாகவும், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திமுகவினர் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புக் குரல்கள் எழுப்பினர். டுவிட்டரில் தேசிய அளவில் இந்த கோரிக்கையை முன்வைத்து டிரெண்ட் செய்தனர்.
கமல் விளக்கம்
இதற்கு விளக்கமளித்துள்ளார் கமல்ஹாசன், தன்னுடைய முதுமையை பற்றி மட்டுமே பேசியதாகவும் கருணாநிதி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் கமல் அப்போது தெரிவித்தார்.
உடல் திறமை முக்கியம்
முதுமை எல்லாருக்கும் வரும். உங்களுக்கும் எனக்கும் வரும், எனக்கும் வரும். என்னுடைய முதுமை எப்படி இருக்கும் என்பது பற்றி எனக்கு தெரியாது. போதிய உடல் திறமை இல்லாவிட்டாலும் ஆட்சியை ஆளக் கூடாது என்பதுதான் எனது கருத்து.
கருணாநிதி பற்றி பேசவில்லை
என்னுடைய சக்கர நாற்காலி.. என்னுடைய முதுமை.. இவைகளைப் பற்றி மட்டும் தான் நான் பேசினேன். கருணாநிதி மட்டும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தது இல்லை. ரூஸ்வெல்ட்டும் அவருக்கு முன்பே சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவர். ஆனால் அவர் இளமையில் இருந்தார். எனவே அமெரிக்க அதிபராக இருந்தார். இவ்வாறு கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.