தமிழ் இனம் மற்றும் தமிழகத்தை பாதுகாக்க ராஜ்யசபாவில் எனது குரல் ஒலிக்கும்.. வைகோ பேட்டி
சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 6 பேரும் இன்று போட்டியின்றி மாநிலங்களவை எம்பி-க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் திமுக சார்பாக போட்டியிட்ட வைகோ இன்று தலைமைச் செயலக செயலாளர் சீனிவாசனிடம் இருந்து, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார்.
திமுக சார்பில் வெற்றி பெற்ற 3 பேரும் ஸ்டாலின் முன்னிலையில் சான்றிதழ்களை பெற்றனர். இதனையடுத்து தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் வைகோ.
அப்போது பேசிய அவர் கூட்டாட்சி தத்துவத்தை காக்க கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன் என கூறினார். மேலும் ஜனநாயகத்திற்கு பேராபத்தாக உருவாகியுள்ள மதச்சார்பின்மையை தகர்க்கின்ற இந்துத்துவா சக்திகளின் படையெடுப்பை எதிர்க்க போவதாகவும் கூறினார்.
ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு கெடு இல்லை.. உச்சநீதிமன்ற உத்தரவால் நீடிக்கும் கர்நாடக அரசு
அறிஞர் அண்ணாவின் குரல் ஒலித்த அவையில் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்த போவதாகவும் கூறினார். மாநிலங்களவை உறுப்பினரானதற்கான சான்றிதழ்களை பெற்றுள்ளதை அடுத்து பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்த உள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.
தமிழ் இனத்தை, தமிழகத்தை, தமிழக வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கும், தமிழக சுற்றுச்சூழலை நாசமாக்க கூடிய பல்வேறு திட்டங்களை எதிர்த்தும் எனது குரல் ஒலிக்கும் என்றார்.