நான் பெருமைமிக்கத் தலைவனின் மகன் .. எச்.ராஜாவை மனநல மருத்துவரிடம் சேர்க்கனும்.. சொன்னது சீமான்
சென்னை: மூத்த பாஜக தலைவர் எச்.ராஜாவை மனநல மருத்துவரிடம் சேர்த்து சிகிச்சை அளிக்க அன்புடன் வேண்டுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் சீமான் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அம்பேத்கர், அப்துல் கலாம் போன்றவர்களெல்லாம் இந்த வர்ணத்தைச் சார்ந்தவர்கள் என்று பாடப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும்போது, உங்களுக்குக் கோவம் வருவது போல எனக்கும் கோவம் வருகிறது. அப்படிப்பட்ட பாடப் புத்தகங்களை ஒரு காலம் வரும்போது நாங்கள் கொளுத்துவோம் என்று கூறினேன்.
எச். ராஜா போன்றவர்கள், அதை ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைக் கொளுத்துவோம் என்று கூறியதுபோலப் புரிந்துக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்களின் ஆர்.எஸ்.எஸ் கொள்கையும் அது தான் என்று அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள்.
சீமான் அண்ணே நீங்களா? பொன்னியின் செல்வனை கலாய்த்த டோலிவுட்டன்கள்! பிரபாஸை வறுத்தெடுக்கும் தமிழன்கள்!
எச்.ராஜாவுக்கு மனநல சிகிச்சை
எச். ராஜாவிற்கு நான் சொல்லிக்கொள்வது, இந்த நாட்டை ஆளுகிற பிரதமர், உங்களுடைய மோடி அவர்களை எதிர்த்துச் சண்டை செய்து வருகிறோம். அவருக்கும் குருவாக இருக்கிற நாக்பூர் தலைமை பீடத்திடமே நாங்கள் மோதுகிறோம், நீங்கள் எங்களுக்கு எம்மாத்திரம். நீங்களில்லை, உங்களின் அப்பாவிற்கு அப்பா வந்தால் கூட எங்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது. நான் எத்தகு பெருமைமிக்கத் தலைவனின் மகன் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? தெரியாது என்றால், தெரிந்துகொண்டு பிறகு பேசுங்கள். ஹெச். ராஜா ஒரு பரிதாபம் என்பதால் அவரைக் கடந்து செல்கிறேன். பாரதிய ஜனதா கட்சிக்காரர்களிடத்திலும், ஐயா ஹெச். ராஜா அவர்களின் குடும்பத்தினரிடமும் நான் அன்பாக விரும்பிக் கேட்டுக்கொள்வது, அவரை ஒரு நல்ல மனநல மருத்துவரிடத்தில் சேர்த்துச் சிகிச்சை அளிக்குமாறு உங்களை அன்போடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
ராஜராஜ சோழனும் வெற்றிமாறன் கருத்தும்
தம்பி வெற்றிமாறன் கூறியது உண்மைதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்திடமிருந்த திரைக்கலையைப் பொதுமைப்படுத்தியது அன்றிருந்த திராவிட இயக்கங்கள் தான். அன்றைய திராவிடத் தலைவர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஐயா எம்.ஜி.ஆர் போன்றவர்கள் திரைப்படத் துறையில் தான் பணியாற்றினார்கள். அதனால், தம்பி அவ்வாறு குறிப்பிடுகிறார். எங்களுடைய பெரும்பாட்டன் அருண்மொழிச்சோழனை இந்து மன்னன் என்று பேசுவதெல்லாம் ஒரு வகையான வேடிக்கை தான். வள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசி, அவரை ஆரியம் தன்வயப்படுத்திக் கொள்ள நினைப்பதைப் போல, ராஜராஜ சோழனையும் தன்வயப்படுத்தும் முயற்சி தான் அது. அந்தக் காலத்தில் இந்திய நாடும் இல்லை, இந்து மதமும் இல்லை என்பது உலகத்திற்கே தெரியும், ராஜராஜ சோழன் என்ற மன்னன் சிவனை வழிபட்ட சைவ மரபினன் என்பது. பன்னிரு திருமறைகளைக் கறையான் அரிக்காமல் காப்பாற்றிக் கொடுத்தவர், அவர் தான். 'ஏடு தந்தானடி தில்லையிலே' என்ற பாடலெல்லாம் அதனால் தான் பாடப்பட்டது. தமிழர் அடையாளங்களில் புகழ் பெற்ற எல்லாவற்றையும் ஆரியம் தனதாக்கிக்கொள்ள முனையும். அப்படித்தான் எங்கள் சிவனை, முருகனை தனதாக்கிக்கொண்டது. அந்த அடிப்படையில் ராஜராஜ சோழனையும் இந்து என்று தன்வயப்படுத்திக்கொள்ள ஆரியம் முயல்வதை அனுமதிக்கக் கூடாது என்று தான் தம்பி வெற்றிமாறன் சொல்கிறார். அதை நான் ஏற்கிறேன்.
திராவிடம் என்பது கோட்பாடு அல்ல
திராவிடத்தை எங்கு ஏற்கிறோம், எதில் எதிர்க்கிறோம் என்று காரணங்கள் இருக்கிறது. முதலில் திராவிடம் என்று ஒரு கோட்பாடே கிடையாது. தனியார் ஊடக நேர்காணலில் முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் நிருபர் 'திராவிட மாடல்' என்றால் என்ன என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர் அம்மாவின் ஆட்சி, கலைஞரின் ஆட்சி இரண்டும் சேர்ந்தது தான் 'திராவிட மாடல்' ஆட்சி என்று பதிலளிக்கிறார். அப்படியென்றால் என்ன? மக்களைக் குடிக்க வைத்து, அதனால் பெறுகிற வருவாயை வைத்துக் கொண்டு அரசை நடத்துவது. பல இலட்சம் கோடிகளை ஊழல் லஞ்சமாகப் பெற்று, பெருத்துக் கொழுப்பது. நிலத்தை, அதன் வளத்தைச் சுரண்டி, விற்று காசாக்குவது. இது தான் ஐயா ஸ்டாலின் கூறும் 'திராவிட மாடல்' ஆட்சி.
பெரியாரை எதிர்க்கவில்லை
தமிழ், தமிழர் என்று பேசிக்கொண்டே தமிழையும், தமிழரையும் அழிக்க நினைக்கிற ஒரு சித்தாந்தத்தை எப்படி ஏற்பது? அதனால், எங்கு ஏற்கிறோம், எதை எதிர்க்கிறோம் என்பதில் எங்களுக்குத் தெளிவு இருக்கிறது. ஐயா பெரியாரை எல்லாவற்றிலும் நாங்கள் எதிர்க்கவில்லை. அதேவேளையில், தமிழ் தேசிய இனத்தின் தலைவராகவும் ஏற்கவில்லை. சாதி ஒழிப்பு, சமூகநீதி, பெண்ணிய விடுதலை என்று அவரும் போராடினார் என்பதை ஏற்கிறோம். ஆனால், அவர் மட்டும் தான் போராடினார் என்கிற திராவிடக் கூற்றை ஏற்கவில்லை, எதிர்க்கின்றோம்.
புரட்சி செய்த பராசக்தி
எங்கள் பாட்டனார்கள் அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசனார், ஜீவானந்தம், சிங்காரவேலர் போன்றவர்கள் பெரியாருக்கும் முன்னோடிகள். சிங்காரவேலரிடமிருந்து தான் நான் கம்யூனிசக் கொள்கைகளைக் கற்றுக்கொண்டேன் என்று பெரியாரே பேசியிருக்கிறார். பெரியார் பகுத்தறிவு பேசுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவை போதித்தவர் எங்கள் பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர். அதனால், அவர்களையும் பேசுங்கள் பெரியாரையும் பேசுங்கள் என்று தான் கூறுகிறோம். ஆனால் இவர்கள் பெரியாரை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவதை ஒரு மானத்தமிழ் மகன் எப்படி ஏற்க முடியும்? ஒரு பெரிய புரட்சியைப் 'பராசக்தி' என்கிற படம் செய்தது. அதற்குக் காரணம் ஐயா கலைஞர் எழுதிய வசனம் தான். அப்படிபட்ட எதார்த்த உரையாடல்களைக் கொண்டு திரையில் மாறுதல்களைச் செய்து காட்டியது திராவிடத் தலைவர்கள் தான் என்பதனால் இந்த இடத்தில் தம்பி வெற்றிமாறன் கூறிய கருத்தை ஏற்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.