அக்னிபாத் எதிர்ப்பு போராட்டங்களுக்கு சீமான் ஆதரவு! சென்னையில் அடுத்த மாதம் ஆர்ப்பாட்டம்!
சென்னை: நாடு முழுவதும் நடைபெற்று வரும் அக்னிபாத் எதிர்ப்பு போராட்டங்களை ஆதரிப்பதாகவும் இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி சென்னையில் அடுத்த மாதம் 3-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்ட அறிக்கை:
அக்னிபத்' திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. அவர்களது போராட்டக்கோரிக்கை வெல்ல வாழ்த்துகிறேன்! அவர்களுக்குத் துணைநிற்கிறேன்! அதே கோரிக்கையை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியும் எழுச்சிமிகுப் போராட்டங்களை மாநிலமெங்கும் முன்னெடுக்கும் எனப் பேரறிவிப்பு செய்கிறேன்.

இத்தோடு, 'அக்னிபத்' திட்டத்துக்கெதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கைகளுக்காகப் போராடும் இளைஞர்கள் மீது வழக்குகளைத் தொடுக்கும் கொடுங்கோல் போக்கைக் கைவிட வேண்டுமெனவும், அறவழிப்போராட்டங்களை அனுமதிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
மேலும் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனிபவிக்கும் ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும், 'அக்னிபத்' திட்டத்தைக் கைவிடக்கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் வருகின்ற 03-07-2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது என்றும் நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.