திராவிட கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுக்கிறதா நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம்?
ஒரு மாற்றத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சி
Recommended Video
சென்னை: திராவிட கட்சிகளுக்கு அதாவது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக, புதிய சக்திகளாக நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மய்யமும் உருவெடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். காரணம், இந்த இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தலில் கிடைத்துள்ள வாக்குகள்தான்!
இரு கட்சிகளும் கிட்டத்தட்ட தலா 5 சதவீத வாக்குகளை இந்த தேர்தலில் அள்ளியுள்ளன. ஆளுக்கு 15 லட்சம், 16 லட்சம் என வாக்குகளைப் பெற்றுள்ளனர். இது சாதாரண விஷயமல்ல. மிகப் பெரிய சாதனை.
இத்தனை காலமாக நாம் தமிழர் கட்சியை இனவாத, தமிழ் தேசியவாத கட்சியாக மட்டுமே பலரும் பார்த்து கேலி கிண்டல் ஏகடியம் செய்து வந்த நிலையில் நாங்கள் சீரியஸாகவே களத்தில் இருக்கிறோம் என்று சீமானும், இவர்கள் வித்தியாசமானவர்கள் என்று மக்களும் இந்த தேர்தலில் காட்டியுள்ளனர்.
அமமுகவுக்கு பெரம்பூரில் கிடைத்த பேரதிர்ச்சி.. வெற்றிவேலை வீழ்த்திய மநீம, நாம் தமிழர்!
கமல்ஹாசன்
புதிதாக பிறந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு என்ன மாதிரியான ஆதரவு கிடைத்து விடப் போகிறது என்ற அலட்சியம் திமுகவிடம் நிறையவே இருந்தது. அதிமுக கூட கொஞ்சம் பயந்தது. ஆனால் திமுக கொஞ்சம் கூட பயப்படவே இல்லை. அலட்சியமாக இருந்தது. ஆனால் ஆட்டம் காட்டி விட்டார் கமல்ஹாசன்.
நோட்டா
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று இதுவரை வரவில்லை. இனியும் வருமா என்ற கேள்வியும் நீண்ட காலமாகவே உள்ளது. தேமுதிகவை மாற்றாகப் பார்த்தார்கள். ஆனால் அது பக்கா பிசினஸ் கட்சி என்பதை காட்டி விட்டது. அதன் நிறம் தெரிந்ததும் மக்கள் ஒதுக்கி தூக்கி போட்டு விட்டார்கள். அமமுகவையும் ஒரு மாற்றாக மக்கள் பார்க்கும் துரதிர்ஷ்டமும் வந்தது. அதுவும் புஸ்ஸாகி விட்டது. பாஜகவை விட மோசமாக நோட்டாவிடம் தோற்றுப் போயுள்ளது அமமுக.
ஜஸ்ட் மிஸ் ஆகி மாஸ் வெற்றி பெற்ற பாரிவேந்தர்.. கடைசி நேர அதிரடியால் எம்.பி. ஆன அதிசயம்!
சீமான்
இந்த நிலையில் கொள்கையை உறுதியாக வைத்து தொடர்ந்து முன்னேறி வரும் சீமானின் நாம் தமிழர் கட்சி முதல் முறையாக ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தத் தேர்தலில்தான் அது தமிழகம் தழுவிய அளவில் நல்ல வாக்குகளைப் பெற்றுள்ளது. 16 லட்சம் வாக்குகள் என்பது ஒரு காசு கூட கொடுக்காமல் வந்தவையாகும். உண்மையான ஓட்டுக்களும் கூட. இது மிகப் பெரிய கெளரவமான விஷயம்.
அசுர வளர்ச்சி
மறுபக்கம் மக்கள் நீதி மய்யம். இதுவும் கிட்டத்தட்ட 16 லட்சம் அளவில் வாக்குகளை வாங்கியுள்ளது. கோவை, வட சென்னை உள்ளிட்ட பல தொகுதிகளில் லட்சம் வாக்குகளை வாங்கி அதிர வைத்துள்ளனர் இக்கட்சி வேட்பாளர்கள். கமல்ஹாசன் சத்தம் போடாமல் சாதித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கமல்ஹாசனின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக பார்க்கப்பட வேண்டியதாகும்
தோலுரித்து காட்டினார்
சீமான் வெற்றிக்கு முக்கிய காரணம் அவரது பேச்சுதான். இந்த முறை அவரது பேச்சை ஒட்டுமொத்த தமிழகமும் வியந்து பார்த்தது. கேட்டது. அவர் கேட்ட ஒவ்வொரு கேள்வியையும் மக்களால் மறுக்க முடியவில்லை. பதில் கொடுக்க முடியாத அளவுக்கு பிரித்து மேய்ந்தார் சீமான். அதை விட முக்கியமாக, திமுக, அதிமுக அவர் தோலுரித்து காட்டினார். அவர்களால் பதிலளித்து சமாளிக்க முடியாத அளவுக்கு திணறடித்தார். சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினரிடம் சிக்கி விவாதிக்க முடியாமல் ஓடிப் போன ஜாம்பவான் கட்சியினரை தமிழகம் முதல் முறையாக பார்த்தது.
மன்சூரலிகான்
சீமான் கட்சியின் இன்னொரு வித்தியாசம் அவர் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள். காளியம்மாள், பாண்டியம்மாள், மன்சூர் அலிகான் என்று அந்த வரிசையே படு வித்தியாசமாக இருந்தது. 20 பெண்கள், 20 ஆண்கள்.. என்று சீமான் நிறுத்திய அந்த விதம், தேசிய கவனம் ஈர்த்தது. திமுக 2 பெண்களை வேட்பாளராக நிறுத்திய போது, சீமான் கட்சியின் 20 பெண்கள் பக்கம் தமிழகத்தின் கவனம் திரும்பியதில் ஆச்சரியம் இல்லைதான்.
தாக்கம்
கமல்ஹாசனும் சற்றும் சளைக்காமல் சாதாரணமானவர்கள், படித்தவர்கள், சமூகப் போராளிகள் , முன்னாள் அதிகாரிகள் என வித்தியாசம் காட்டினார். படித்தவர்கள் இவர் நம்மவர் என்ற உணர்வை கமலிடம் கண்டனர். இப்படி சீமானும், கமலும் மாறி மாறி தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவு, மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என பல தரப்பட்டவரும் இவர்கள் பக்கம் திரும்பி நிற்க ஆரம்பித்துள்ளனர்.
சரித்திர நாயகர்கள்
சரித்திர நாயகர்கள் சாதாரணமானவர்களாகத்தான் இருப்பார்கள். காலம்தான் அவர்களை நாயகர்களாக்குகிறது.. இவர்கள் இருவரும் அந்த வரிசையில் இணைவார்களா.. காலம் பதில் சொல்லும்.