நாம் தமிழர் அரசை நிறுவ உழைப்பவர்களுக்கு.. பொங்கல் வாழ்த்து தெரிவித்த சீமான்
சென்னை:நாம் தமிழர் அரசை நிறுவ உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் விழாவை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். பொங்கல் திருவிழா நாளில் தமிழ்நாட்டின் எனது சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அதுபோன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைருக்கும் மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு தனது தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தாமரைப் பொங்கலாக தமிழ்ப் பொங்கல் மலரட்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
பொங்கல் வாழ்த்து கூறிய சீமான்
அந்த வரிசையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொங்கல் வாழ்த்துகளை கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: உலகெங்கும் வாழும் தமிழ்த்தேசிய மக்கள் சாதி, மதம் கடந்து கொண்டாடும் பெருவிழாவாகத் தொன்றுதொட்டு இன்றுவரைத் திகழ்கிறது பொங்கல். அப்பொங்கலைப் பற்றிய செய்திகளைச் சங்க இலங்கியங்களும் பகர்கின்றன.
நெடுநல்வாடை, அகநானூறு
பொங்கல் இள மழை புடைக்கும் நாட என ஐங்குறுநூறும், பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி என பதிற்றுப் பத்தும், போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் என்றும் பெய்து புலந்து இறந்த பொங்கல் வெண் மழை என அகநானூறும், பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை என நெடுநல்வாடையும் சிறப்பித்துக் கூறுகின்றன.
வேளாண்மையை மீட்க
இழந்த உரிமைகள் அனைத்தையும் மீட்கவும் மண்வளம், மொழிவளம், நீர்வளம், நிலவளம், கான்வளம், மலைவளம் போன்ற இயற்கை வளங்களைக் காக்கவும், உழவுத் தொழிலை உயர்த்தவும், இயற்கை வேளாண்மையை மீட்கவும், உழவர் பெருமக்களை வாழ்விக்கவும், தற்சார்பு பொருளியலை நிலைநிறுத்தவும் இந்நாளில் உறுதியேற்போம்.
நாம் தமிழர் அரசு அமையும்
மேலும் இயற்கையின் பேரிடர்களால் வாழ்விழந்து நிற்கும் அனைத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், மருத்துவமும் கல்வியும் அனைத்து மக்களுக்கும் கட்டணமின்றி வழங்கவும், அதற்கான அரசை நிறுவ உழைத்துக் கொண்டிருக்கும் நாம்தமிழர் கட்சியின் சார்பில் உலகுவாழ் உயிர்க்கினிய தமிழ்ப் பேரினத்தினத்தின் உறவுகளுக்கு என் இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை உரித்தாக்குகின்றேன் என்று சீமான் கூறியுள்ளார்.