ஆணவக் கொலைகளை தடுக்க என்ன வழி.. தமிழக அரசுக்கு யோசனை சொல்லும் சீமான்..!
சென்னை: தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரத்தைச் சேர்ந்த சரண்யா மற்றும் மோகன் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். மாற்று சமூகத்தைச் சேர்ந்த இவர்களைப் பெண்ணின் சகோதரரும் மைத்துனரும் விருந்து வைப்பதாகக் கூறி, வீட்டுக்கு அழைத்து வெட்டிப்படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆணவக் கொலைகளைத் தடுப்பது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையில் சீர்திருத்தம்! - சீமான்

சீமான் அறிக்கை
அந்த அறிக்கையில், தங்களது விருப்பத்தின் பெயரில், காதலித்து திருமணம் செய்து கொண்டதாலேயே, குடும்பத்தினரால் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதை, 'சாதிய ஆணவப்படுகொலை' என்றே பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்ய மறுப்பதும், இதனைப் பழிவாங்கும் போக்கோடு நிகழ்த்தப்பட்ட கொலை என்று கூறி சுருக்குவதும் ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளார்.

வரணாசிரம கட்டமைப்பு ஏற்க முடியாது
தொடர்ந்து அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ச்சிபெற்றுள்ள 21ம் நூற்றாண்டிலும் சாதியின் பெயரால் நடக்கிற படுகொலைகள் சமூகத்தை வெட்கித் தலைகுனியச் செய்கின்றன. பிறப்பின் வழியே பேதம் கற்பித்து, மானுடச்சமூகத்தைப் பிளந்து பிரிக்கிற சாதி எனும் வருணாசிரமக் கட்டமைப்பை எதன்பொருட்டும் ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

யார் பொறுப்பு?
அதேபோல் மனித மனங்களில் புரையோடிப் போயிருக்கிற சாதி எனும் சமூகப்புற்றால் நிகழும் வன்முறைகளும், தீண்டாமைக் கொடுமைகளும், ஆணவப் படுகொலைகளும் கடும் கண்டனத்திற்குரியது. இவற்றை சட்டத்தின் துணைகொண்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது அரசின் கடை என்று தெரிவித்துள்ளார்.

தனிச்சட்டம் தேவை
கும்பகோணம் தம்பதிகளான சரண்யா - மோகன் மரணத்திற்குக் காரணமான கொலைகளுக்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.