மருத்துவ கனவுகளை பொசுக்கும் நீட்-க்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் பதாகை ஏந்தி போராட்டம்
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் இன்று தமிழகம் முழுவதும் பதாகைகளை ஏந்தும் கண்டனப் போராட்டத்தை நடத்தினர்.
மாணவர்களின் உயிரைக் குடிக்கும் நீட் தேர்வை நடத்தும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், 'நீட்' தேர்வை முற்றாக ரத்து செய்யக்கோரியும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக மாநிலம் முழுவதும் பதாகை ஏந்தும் அறப்போராட்டங்கள் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் .இன்று அவரது இல்லத்தின் முன்பு இணைந்து பதாகை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவு- நீட்-க்கு இப்ப நோ- அப்ப நாங்க யாருடன் கூட்டணி? புரியாத புதிர் 'சுதீஷ்'
ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்
முன்னதாக, காவிரி நதிநீர் உரிமை மீட்புப் போராட்டத்தில் தீக்குளித்து உயிரிழந்த பா.விக்னேஸ் 4 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஈகைச்சுடரேற்றி வீரவணக்கம் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. இன்று தமிழகமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள், மாணவர் பாசறையினர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து நீட் தேர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தும் முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் #BanNEETSaveStudents என்ற ஹேஷ்டேக்குடன் இணைத்து அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் இவை இன்று அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
மவுனமாக கடப்பது ஏன்?
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல கேள்விகளை நீட் தேர்வுகளை ஆதரிக்கிற பெருமக்களுக்கும் அதை கொண்டு வந்திருக்கும் அரசுக்கும் எழுப்பியிருக்கிறோம். எந்த பதிலும் இதற்கு சொல்லாமல் மவுனமாக நீட் தேர்வை செயல்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். வெறுக்கின்றோம்.
அதே பழைய பாடங்கள்
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று வருகிற மாணவர்களுக்கு பாடம் நடத்துகிற மருத்துவர்கள்- பேராசிரியர்கள் யார்? அவர்கள் ஏற்கனவே இருந்த கல்வி முறையில் தேர்ச்சி பெற்று வந்த பேராசிரியர்கள் தானே? அவர்கள் ஒன்றும் நீட் தேர்வு முறையில் இருந்து தேர்ச்சி பெற்று வந்தவர்கள் இல்லை.
தரம் எப்படி மேம்படும்?
நீட்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிற பாடத் திட்டம் எது? ஏற்கனவே இருந்த அதே பழைய பாட முறைதான். ஆக பாடம் அதேதான்.. பாடம் நடத்துகிற பேராசிரியர்கள் படித்தது அதேதான்.. ஆனால் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் மட்டும் மாணவர்களின் தரம் மேம்பட்டு விடும் என்பது எப்படி சரியாகும்?
குறைந்த மதிப்பெண்கள்
1-ம் வகுப்பில் இருந்து மருத்துவராக வேண்டும் என கனவு கண்டு 12-ம் வகுப்பில் அதிகப்படியான மதிப்பெண்களையும் பெறுகிறார்கள் நம் பிள்ளைகள். ஆனால் நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் நான் தோற்றுப் போனேன். குறைவான மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் எப்படி தகுதியான மாணவர்களாவார்கள்?
ஆட்சியாளர்களுக்கும் தேர்வு வைப்பீங்களா?
கடந்த முறை நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்தில் எண்ணற்ற பேர் உள்ளே சென்றுவிட்டனர். அப்படியானால் தரமான மருத்துவர்களை நீங்கள் உருவாக்கவில்லை. போலியான மருத்துவர்களைத்தான் உருவாக்குகிறீர்களா? தகுதியற்ற மருத்துவர்களைத்தான் உருவாக்குகிறீர்கள்.. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் போன்ற ஆட்சியாளர்களுக்கும் தகுதித் தேர்வு வைக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.