ஐடி ஊழியர் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க இவருக்கு வாக்களியுங்கள்.. நாம் தமிழர் கட்சி கோரிக்கை
சென்னை: லோக்சபா தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும், தகவல் தொழில்நுட்பப் பணியாளரான ந.மதுசூதனனுக்கு ஆதரவு கோருவதாக அக்கட்சியின், தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையானது மென்பொருள், வன்பொருள், தொலைத்தொடர்பு, பொறியியல் மற்றும் ஆராய்ச்சி, வணிக செயலாக்கம், மின் வணிகம் போன்ற பல தளங்களில் இயங்கும் 8.4 லட்சம் கோடி ரூபாய் ஆண்டு வருமானமும், 39 லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பையும், 12 கோடி தொழிலாளர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பையளிக்கும் மிகப்பெரிய துறையாகும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 2-லிருந்து 3 லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்குமென கணிக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் சிறியதும் பெரியதுமாய் 4,750 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இத்துறை சார்ந்து செயல்படுகின்றன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.7% பங்கு வகிக்கும் இத்துறை தமிழகத்தில் மட்டும் 8 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் வணிகத்தை நடத்தும் மிகப்பெரிய சேவைத் துறையாகும்.
இத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் சந்திக்கும் பணி பாதுகாப்பு, பணி நேரம், சரியான ஊதியம், பாலின பாகுபாடு போன்றவை சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை களைந்து தீர்வு காணும் வகையிலான வலிமையான சட்டங்களோ அதற்கான அரசின் துறைகளோ இல்லாத நிலையில் முற்றிலும் கைவிடப்பட்டவர்களாக உள்ளனர்.
ஏற்கனவே உள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் இத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் வலிமையானதாக இல்லாத காரணத்தால் அந்த சட்டங்களை வலிமைப்படுத்தும் வகையில் இத்துறை பணியாளர்களுக்கான வலிமையான புதிய சட்டங்களை இயற்றி அதற்கான தனித்த பிரிவு ஒன்றை மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் நலத்துறைகளின் சார்பில் தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்களின் நலன் சார்ந்த அமைப்புகளின் பங்களிப்போடு உருவாக்கினால் மட்டுமே ஆக்கப்பூர்வமான தீர்வாக இருக்கும்.
இத்துறையில் உள்ள பணியாளர்களின் பிரச்சனைகளை களைந்து அதற்கு தீர்வு காணும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு அரசியல் கட்சியின் சார்பில் இத்துறை சார்ந்த பணியாளர்களுக்கென தனித்த பிரிவு ஒன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழிகாட்டுதலோடு உருவாக்கப்பட்டு பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, சட்ட விழிப்புணர்வு உள்ளிட்ட பணியாளர் நலன் சார்ந்த உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இத்துறையில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை கலையும் வண்ணம் இதற்கான குரல் இந்திய நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்யும் வகையில் இத்துறையில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவரையே தேர்தலில் போட்டியிட வைத்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவது என்பது ஆகச் சிறந்த ஒன்றாக இருக்குமென்ற எண்ணத்தின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பிரிவின் செயலாளராக உள்ள ந.மதுசூதனன் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ளார்.
இத்துறை பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதற்கான சட்டங்களை அவர்களே இயற்றும் பொருட்டு இத்துறை பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று இத்துறையில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவருக்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தமைக்கு இந்த பிரிவின் சார்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமைக்கும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நமது சக தொழிலாள நண்பர் மதுசூதனனை வெற்றியடைய வைத்து லோக்சபா அனுப்ப இந்தியாவில் உள்ள அனைத்து தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் ஆதரவும், தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் நலன் சார்ந்த பல்வேறு அமைப்புகளின் ஆதரவும் மிகவும் இன்றியமையாதது என்பதால் நண்பர்கள் அனைவரும் அனைத்து வகையிலும் ஆதரவு நல்கி நமக்கான பிரதிநிதியாக மதுசூதனனை லோக்சபா அனுப்ப உதவிட வேண்டுகிறோம்.
கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் ந.மதுசூதனன் சுய விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
பெயர்: ந.மதுசூதனன்
தகப்பனார் பெயர்: தி.நடராஜன், விவசாயி
முகவரி : 967, சப்பானிபட்டி, கரகூர் அஞ்சல், கிருட்டிணகிரி மாவட்டம்.
வயது : 37
தாய்மொழி: தமிழ்
பிற மொழி : ஆங்கிலம்
மின்னஞ்சல்: [email protected]
கைபேசி எண் : 9500095032
கல்வித் தகுதி: B.Sc (Computer Science)
MCA (Master of Computer Applications)
தொழில்: முதுநிலை கணினி வல்லுநர் (Senior IT Professional)
வெளிநாடுகள் : அமெரிக்கா, ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள், கத்தார்,
குவைத், பஹ்ரைன், பெரு, சைப்ரஸ் போன்ற நாடுகளில் பணியாற்றிய அனுபவம்.
ஓய்வு நேரம்: இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு, இயற்கை வளங்கள் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி
அரசியல் இலக்கு: பல்வேறு நவீன அறிவியல் தொழில் நுட்பங்களின் உதவியுடனான ஒரு பரந்துபட்ட தற்சார்பு பசுமை தாய்மை உற்பத்தி பொருளாதார கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் சிற்றூர் பொருளாதார வளர்ச்சி.
இயற்கையை பாதிக்கா வண்ணம் நீர்வளம், நிலவளம் சார்ந்த தொழில்களை பல்கிப் பெருக்கி படித்த, படிக்காத அனைவருக்கும் பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார தன்னிறைவு.
தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நிரந்தரம், பணி நேரம், ஊதியம், பதவி உயர்வில் உள்ள குளறுபடிகள், பெண் தொழிலாளர்களிடம் காட்டும் பாகுபாடு போன்ற பல்வேறு பிரச்சனைகளை களையும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போன்ற வலுவான தொழிலாளர் நலச் சட்டங்கள் இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு மத்திய, மாநில தொழிலாளர் நலத்துறைகளின் கீழ் இத்துறை பணியாளர்களுக்கென தனித்த பிரிவுகள் உருவாக்கப்பட்டு தீர்வு காணப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.