இதிலும் சீமான்தான் நம்பர் 1.. பெண் வேட்பாளர் 117.. ஆண் வேட்பாளர் 117.. டிசம்பரில் லிஸ்ட்.. சபாஷ்!
டிசம்பரில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என சீமான் தெரிவித்துள்ளார்
சென்னை: டிசம்பர் இறுதியில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதில், 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும், 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
விரைவில் தேர்தல் வரப்போகிறது.. அதற்கான வேலைகளில் எல்லா கட்சிகளுமே இறங்கிவிட்டன.. யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது? அல்லது தனித்து போட்டியிடுவதா? அல்லது யாருக்கு எத்தனை சீட் என்பன உட்பட விறுவிறு பேச்சுவார்த்தைகளும் துரிதமாகி வருகின்றனர்.
அந்தவகையில், நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து களம் காண போகிறது.. "எப்பொழுதும் போல நாம் தமிழர் கட்சி பாஜக, அதிமுக, காங்கிரஸ், அதிமுக என எந்த கட்சியுடனும் நிச்சயமாக சேராது... தனித்தே நிற்கும்" என்று சில தினங்களுக்கு முன்பு சீமான் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று ஒரு செய்தி கசிந்தது.. சீமான் காரைக்குடியில் போட்டியிடலாம் என்று உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் வெளியானது.. கடந்த 2016 தேர்தலில் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.. அதனால், வட மாவட்டத்தில் போட்டியிட்ட சீமான், இந்த முறை தென்மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம்.
அதனால், தன்னுடைய சொந்த மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் போட்டியிடலாமா அல்லது பக்கத்து மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடலாமா என்ற ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறாராம்.. இதில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில்தான் சீமான் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "டிசம்பர் இறுதியில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அதில், 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும், 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள்" என்றார்.
சீமான் இவ்வாறு அறிவித்துள்ளது புதிதல்ல.. ஏற்கனவே கடந்த எம்பி தேர்தலின்போது 40 தொகுதிகளிலும் இதுபோலவே தனித்து போட்டியிட்டு, 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் நிறுத்தினார்.. திமுக, அதிமுக என பாரம்பரிய மிக்க கட்சிகள் இருந்தாலும், யாருமே செய்யாத சாதனையாக ஆண்-பெண் வேட்பாளர்களுக்கு சரிசமமாக வாய்ப்பு தந்தார் சீமான்.. இது பல தரப்பினரால் கவனிக்கப்பட்டது.
வழக்கமாக, ஒவ்வொரு முறையும் தனித்து போட்டியிட்டு, மலைபோன்ற கட்சிகளுடன் மோதி வரும் சீமானின் தைரியம் பேசப்பட்டு வருகிறது.. இதில், ஆண் வேட்பாளர்களுக்கு நிகராக பெண் வேட்பாளர்களையும் சீமான் நிறுத்தி வருவது அவரது மற்றுமொரு துணிச்சலை வெளிப்படுத்தி வருகிறது.. எம்பி தேர்தலின்போது, ஆண் வேட்பாளர்களைவிடவும் பெண் வேட்பாளர்கள் தான் பெரிதும் பேசப்பட்டனர்.. மக்களையும் வெகு எளிதாக கவர்ந்தனர்.. அந்த வகையில் இந்த முறையும் பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.