நான் தமிழக முதல்வராக இருந்தால் ஈழத் தமிழருக்கு குடியுரிமையை மத்திய பாஜக அரசு மறுக்க முடியுமா? சீமான்
சென்னை: தாம் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தால் மத்திய அரசால் ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமையை மறுக்க முடியுமா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் கூவம் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வு தொடர்பாக அப்பகுதி மக்களை சீமான் இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
1 கோடி தடுப்பூசி.. ஆகஸ்ட் மாதம் கர்நாடகா வரும்.. ஹேப்பியாக அமைந்த முதல்வரின் முதல் டெல்லி பயணம்
மக்களை வெளியேற்றுவதில் திமுக , அதிமுக என்று வேறுபாடில்லை. கருணாநிதி , ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சியிலும் இதுபோன்று நடந்துள்ளது. ஆக்கிரமிப்பு என்றால் மின் இணைப்பு, எரிவாயு, குடும்ப அட்டை வாக்காளர் அட்டை எப்படி கொடுத்தார்கள். இந்த இடம் யாருக்கு வழங்கப்பட உள்ளது, எந்த நோக்கில் பயன்படுத்தப்பட உள்ளது? 2022 ல் அனைவருக்கும் வீடு இருக்கும் என பிரதமர் கூறுகிறார்.. ஆனால் இப்போது வரை பலருக்கு வீடில்லை.
மக்களை வெளியேற்ற வேண்டாம்
வெள்ள அபாயம் வரும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதை காரணமாக வைத்து கூவம் கரையோரம் வாழ்பவர்களை வெளியேற்றுவதாக கூறுவது பொய். அவர்களின் வாழ்வாதாரம் இந்த பகுதியில்தான் இருக்கிறது.
கூவமும் ஸ்மார்ட் சிட்டியும்
அரசின் பொருளாதாரமே கவலையில் இருக்கிறது. கூவம் ஆற்றில் ஸ்மார்ட் சிட்டி எதுக்கு ? தலைநகரில் தமிழர்கள் வாழக்கூடாது என திட்டமிட்டு இவ்வாறு செய்கிறார்கள். ஆக்கிரமிப்பு என்ற சொல்லே அருவருக்ககத் தக்கது, ஆட்சியருக்கு தெரியாமல் இந்த மக்கள் எப்படி இங்கு குடியேறி இருக்க முடியும். 25 ஆண்டுக்கும் மேலாக உள்ள அரசமரம் இங்கிருக்கிறது , இதுவே அவர்கள் பல ஆண்டுகளாக இங்கு வாழ்வதற்கு ஆதாரம்.
பாஜக போராட்டம்
நீதிமன்றமே ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டதாக இருக்கும்போது தாஜ்மஹாலாகவே இருந்தாலும் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்தால் அகற்றுவோம் என நீதிமன்றம் கூறியது நகைப்பிற்குரியது. வள்ளி திருமண , அரிச்சந்திர மயான கண்டம் , பவளக்கொடி நாடகம் போல தமிழக பாஜகவின் மேகதாது அணை எதிர்ப்பு போராட்ட அறிவிப்பை பார்க்க வேண்டும். பிரதமரிடம் நேரடியாக பேசாமல் , போராட்டம் என்று சொல்லி வெட்டி பில்டப் கொடுக்கிறார் அண்ணாமலை. Till i death Proud கன்னடிகா என்று கூறிய அண்ணாமலை தற்போது Proud தமிழ்டிகாவாக ஆகிவிட்டாரா..? அண்ணாமலை பரிதாபத்திற்குரியவர் , அலுவலராக இருந்தவரை தேவையில்லாமல் பதவி விலக வைத்துவிட்டனர். பிரதமர் தாடி முடியை வளர்த்துதான் மக்களின் துயரத்தில் பங்கேற்க வேண்டுமா.?
100 நாட்கள் சாதித்தது என்ன?
ஸ்டாலின் ஆட்சி நன்றாக இருப்பதாக எப்போதும் நான் கூறியதில்லை. பொதுமக்களின் மனுக்களை வாங்கி பெட்டியில் பூட்டிய ஸ்டாலின் 100 நாளில் தீர்த்த பிரச்சனைகள் என்ன. மார்க்கண்டேய நதியில் ஐந்தே மாதத்தில் அணை கட்டியதை திமுக , அதிமுகவால் ஏன் தடுக்க முடியவில்லை.
இந்தியாவுக்கு பிரச்சனை
தமிழர்கள் உயிரோடு இருப்பதே இந்திய அரசுக்கு பிரச்சனை. சீனா இலங்கையை தங்களது மாகாணமாக மாற்றி விட்டது. நான் முதல்வராக இருந்தால் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமையை மறுக்க முடியுமா..? திபெத் , வங்கதேச , பாகிஸ்தான் அகதிகள் இந்து என்றால் ஈழத்தமிழர்கள் யார். தமிழர்கள் சைவ, வைணவ நெறியினர் , தூங்கும்போது ராவோடு ராவாக இந்துவாக மதம் மாற்றி விட்டார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.