கொளத்தூரில் அல்ல... திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறாராம் சீமான்
சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில் சீமான் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தலில் திமுகவை மிக கடுமையாக எதிர்த்து பிரசாரம் செய்து வருகிறது நாம் தமிழர் கட்சி. அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்.
ஸ்டாலின் -சீமான்
மேலும் மு.க.ஸ்டாலின் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்றார் சீமான். அத்துடன் இந்த தேர்தல் தமிழரா? திராவிடரா? என்பதாகத்தான் இருக்கும் என்றும் சீமான் பேசி வந்தார்.
சீமான்- அதிமுக
இதனால் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் சீமான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டியிட்டால் அதிமுக இந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்தாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்பட்டது.
திருவொற்றியூரில் சீமான்?
இந்த நிலையில் தென்மாவட்ட மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் திருவொற்றியர் தொகுதியில் சீமான் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. குமரி அனந்தன் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். அதேபோல் திமுகவின் கேபிபி சாமியும் கோட்டையாக இத்தொகுதியை வைத்திருந்தார். மொத்தம் 12 தேர்தல்களில் 6 முறை திமுக, 4 முறை அதிமுக, ஒரு முறை காங்கிரஸ், ஒரு முறை காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் வென்றுள்ள தொகுதி இது.
திருவொற்றியூர் நிலவரம்
இத்தொகுதியில் நாடார்கள், மீனவர்கள், முதலியார் ஜாதியினர் மிக முக்கியமான தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். 2016 சட்டசபை தேர்தலில் திமுகவின் மறைந்த கேபிபி சாமி 82,205 வாக்குகள் பெற்று வென்றார்; அதிமுகவின் பால்ராஜ் 77,342 வாக்குகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.