சீமான் 53.. தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத ஆளுமை.. "தம்பிகள்" மகிழ்ச்சி கொண்டாட்டம்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த நாள் இன்று
சென்னை: தமிழக அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக மாறி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் 53 -வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்குத் தமிழகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
சீமான் - தமிழ்த் திரைப்பட இயக்குநர்.. நடிகர்.. என்ற அடையாளத்துடன் தமிழக மக்களுக்கு நெருக்கமானார். சிபா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தலைமையேற்று நடத்தவும், தனித்துவம் வாய்ந்தவராக பார்க்கப்பட்டார்.
நாளடைவில், தமிழக முதல்வர் ஆசையுடன் திளைத்து வருபவர்களில் சீமானும் ஒருவர் என்று சொல்லிவிட்டாலும், அவர் எடுத்து வைக்கும் அரசியலில் பெரிய அளவிலான பிழையை சுட்டிக் காட்டிவிட முடியாது.
தர்பார் படத்திற்கு விளம்பரம் கிடைச்சிடுச்சு.. ரஜினி திடீர் மனமாற்றம்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
உறுதி
தமிழ் இனம் என்று சொன்னால், அதில் சீமானின் பெயரை உச்சரிக்காமலும், நாம் கடந்துபோய்விட முடியாது. இவர், தமிழ்த் தேசியம் குறித்து பேசி வருகிறார்... தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதில் உறுதியாகவும் உள்ளார்.
குறிக்கோள்
தமிழின மீட்சியே தமது லட்சியம், தனித்தாயகத் தமிழீழத் தனியரசு அமைப்பது தான் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு, அதற்காக போராடுவதே தமது குறிக்கோள், மாநிலம் அனைத்திற்கும் தன்னுரிமை தேசிய இனங்களின் பிறப்புரிமை என்பதே இவரது கட்சியின் விதையாக விழுந்துள்ளது.
உரம்
தமிழ்இனம் என்னும் கூட்டை விட்டு வெளியே வந்தால், பரந்த அரசியல் தமக்காக காத்திருப்பது தெரிந்தும், தன்னை காம்பரமைஸ் செய்து கொள்ளாமல் இருக்கிறார் சீமான். "என் மக்களை நம்பி என் கருத்தியலை நான் விதைக்கிறேன்.. முளைத்தால் மரம்.. இல்லையேல் மண்ணுக்கு உரம்" என்று சொல்லும் இவரது பாங்கு பெரும்பாலானோருக்கு எளிதில் புரியாது.
கேள்விகள்
ஒவ்வொரு கேள்விகளையும், ஒவ்வொரு பிரச்சினையையும் ஆழமாக வேரூன்றியே யோசிக்கிறார் சீமான். தனக்கென்று ஒரு பாதை வகுத்து கொண்டாலும், அதை சந்தர்ப்பவாதத்துக்கு ஒருநாளும் பயன்படுத்தியது இல்லை. ஆனால், "சீமான் நல்லாதான் பேசறாரு.. நாக்கை புடுங்கிக்கிற மாதிரி நல்லாதான் கேள்வி கேட்கிறாரு.. ஆனாலும் இவரை நம்பலாமா? நம்பப்படாதா?" என்று இவரை பற்றின ஒரு சந்தேகம் மக்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.
தேர்தல் அரசியல்
தேர்தல் அரசியலை ஆரம்பத்தில் வெறுத்தவர்தான் சீமான், ஆனால், மக்கள் இந்த தேர்தல் அரசியலில்தான் தொடர்ந்து ஏமாறுகிறார்கள் என்று நினைத்து தேர்தல் அரசியலையும் கையில் எடுத்தார். தேர்தல் களங்களில் புழங்கும் பணத்துக்கு மத்தியில் நுழைந்து, "நாங்கள் உங்கள் வாக்குக்கானவர்கள் அல்ல, அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கைக்கானவர்கள்" என்பதை சீமான் தவிர வேறு யாராலும் சொல்லிவிட முடியாது.
3-வது இடம்
அதேபோல, ஒரு தேர்தலையும் விடுவதில்லை இவர்.. இறங்கி ஒரு கை பார்த்துவிடுகிறார். சீமானின் பிரச்சாரம் எப்போதுமே மிகப் பெரிய வீச்சை கொண்டிருக்கும். இணையத்தில் ட்ரெண்ட்டாக இருப்பதும் சீமான் பேச்சுக்கள்தான். ஆளும்தரப்பு, எதிர் தரப்பு, என யாரையுமே விட்டு வைப்பதில்லை.. கொட்டும் மழை, அடிக்கும் வெயில் என எதையுமே பார்ப்பதும் இல்லை. மக்களை கவர்ந்தது மட்டுமல்ல, யோசிக்க வைக்க கூடியதும் சீமானின் பேச்சுக்கள்தான். திராவிட கட்சிகளே பலமுறை அரண்டு போயின சீமானின் பேச்சில்! பேச்சில் வீரியம், காரம் குறையாமல் அதேசமயம் நாக்கை பிடுங்கி கொள்வது போல கேள்விகள் கேட்டதுதான், சீமானை 3-வது இடத்துக்கு அரசியலில் கொண்டு வந்து உயர்த்தியது.
பேரடையாளம்
மக்களுக்கும், மண்ணுக்கும், மரத்துக்கும், மலைக்கும் கூட போராடி கொண்டிருக்கும் சீமானின் விழுதுகள் இன்று ஏராளம். யாருமே சொல்லாமல், மக்கள் பிரச்சனைகளை இக்கட்சியினர் தாமாக முன்வந்து எடுத்து செய்வதால்தான், சீமான் மக்களிடம் எந்நேரமும் நெருங்கியே இருக்கிறார்... இன்று தமிழகத்தின் பேரடையாளமாகவும் திகழ்கிறார்!
|
அண்ணன் சீமான்
ஏன் தெரியமா சீமானை அண்ணன்னு சொல்றோம் என்று ஒருவர் போட்ட ட்வீட்தான் இது: "ஏன் தெரியுமா சீமானை தலைவன்னு சொல்லாம அண்ணன்னு சொல்றோம்? முடியை சரியா வெட்டு ,
ஏன்டா தாடி வளக்குற ஷேவ் பன்னு, உடற்பயிற்சி செஞ்சி உடம்ப ஏத்து, தலைகவசம் போட்டு வண்டி ஓட்டு, சீட் பெல்ட் போட்டு காரை ஓட்டு, எந்த கெட்ட பழக்கமும் இருக்க கூடாது, வீட்ட பாத்துக்கோ"
|
தமிழன்
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழன்னு அழுத்தி சொல்ல சீமான் முக்கிய காரணம் என்கிறது ஒரு ட்வீட்: "எவ்வளவு வேணா கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனா இன்னைக்கு " தமிழன் " னு அழுத்தி சொல்ல மிக முக்கிய காரணங்களில் இவரும் ஒருவர் . அதுக்கு ஒரு தமிழனாக எப்போதும் கடமைப் பட்டு உள்ளேன் !!"
|
தவிர்க்கவே முடியாது
சீமான் என்ற தனிமனிதரை தவிர்க்கலாம், ஆனால் அவரது அரசியலை தவிர்க்க முடியாது என்கிறது இன்னொரு ட்வீட்: "சீமான் எனும் தனி நபரை நீங்கள் தவிர்க்கலாம், ஆனால் அவர் முன்வைக்கும் அரசியலை எவராலும் தவிர்க்க முடியாது!"