12 வயது சிறுமியை சீரழித்து.. கரண்ட்டை செலுத்தி கொன்று.. ஈரக்குலையே நடுங்குது.. பொங்கிய சீமான்
திண்டுக்கல் சிறுமி கொலை சம்பவத்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: "12 வயது திண்டுக்கல் சிறுமியை பலாத்காரம் செய்து, கேட்போரின் ஈரக்குலையையே நடுநடுங்கச் செய்யும் இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளி விடுதலை பெற்று தப்பிக்க தமிழக அரசு வாய்ப்பு ஏற்படுத்தியிருப்பது வெளிப்படையான ஜனநாயகத் துரோகமாகும்" என்று சீமான் காட்டமாக கூறியுள்ளார்.
கடந்த வருடம் நடந்த சம்பவம் இது.. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடம் குரும்பட்டியை சேர்ந்த தம்பதி வெங்கடாசலம், லட்சுமி.. இவர்கள் சம்பவத்தன்று வெளியே சென்றிருந்த சமயம், எதிர் வீட்டில் வசிக்கும் கிருபானந்தன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பிறகு, மயக்கமடைந்த சிறுமியை மின்சார வயரை மூக்கிலும் வாயிலும் செலுத்தி கரண்ட் பாய்ச்சி படுகொலையும் செய்துள்ளார். இதைக் கொலையாளியே போலீசில் ஒப்புக் கொண்டுமுள்ளார்.. வடமதுரை காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து கிருபானந்தனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.. திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
இது சம்பந்தமான தீர்ப்பு சமீபத்தில் வெளியானது.. அதில், 'சாட்சிகள் கலைக்கப்பட்டு கிருபானந்தன் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை" என்று கூறி விடுதலை செய்யப்பட்டார். இந்த தீர்ப்பு பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை தந்தது.. இதை கண்டித்தும், வழக்கை தீவிரப்படுத்தக்கோரியும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் உள்ளதாவது: ''திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தில் வசிக்கும் வெங்கடேசு என்பவரின் 12 வயது மகள் கலைவாணி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், அக்கோர சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளி தண்டனையின்றி தப்பியிருப்பது பேரதிர்ச்சி தருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டில் தனியாக இருந்த அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் செலுத்தி கொலை செய்த கிருபானந்தன் என்பவர் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அவரை திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹத்ராஸ் தலித் பெண்ணுக்கும் பலாத்கார குற்றவாளிக்கும் இடையே போனில் தொடர்பு.. சொல்கிறது உ.பி. போலீஸ்
கேட்போரின் ஈரக்குலையையே நடுநடுங்கச் செய்யும் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளி விடுதலை பெற்று தப்பிக்க தமிழக அரசு வாய்ப்பு ஏற்படுத்தியிருப்பது வெளிப்படையான ஜனநாயகத் துரோகமாகும்.
இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் நாளை (09-10-2020) 3 லட்சம் முடிதிருத்தும் நிலையங்களை அடைத்து மாநிலம் முழுவதும் நடத்த இருக்கும் அறப்போராட்டத்தை
நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.
அண்மைக்காலத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சமூகம் குறித்தான பெருங்கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்துகின்ற சூழலில், இத்தகையக் கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டோர் சட்டத்திலுள்ள துளைகளைப் பயன்படுத்தித் தப்ப வழிவகை செய்வதும், தண்டனை பெற்றுத்தராமல் காலம் தாழ்த்துவதுமான அரசின் முறைகேடான செயல்கள் சமூகத்தில் இதுபோன்ற மனித பேரவலங்கள் மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான தண்டனைச் சட்டங்களைக் கடுமையாக்கி, அவர்கள் மீதான வழக்கை சிறப்புத் தனி நீதிமன்றங்கள் மூலம் விரைந்து விசாரித்துத் தண்டனையளிப்பதனால் மட்டுமே இத்தகைய குற்றங்களை அடியோடு சமூகத்திலிருந்து அகற்ற இயலும்.
ஆகவே, சிறுமியை வன்கொடுமை மற்றும் படுகொலை செய்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் விரைவாக மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு உச்சபட்சத் தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் எனவும், தொடரும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முற்றுமுழுதாகத் தடுத்து நிறுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்'' என சீமான் கூறியுள்ளார்.