மாணவர்களை இடைநிற்றலுக்கு தள்ள சதித்திட்டம்...! தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்
Recommended Video
சென்னை: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை கொண்டுவந்திருப்பது மாணவர்களை இடைநிற்றலுக்கு தள்ளி வெளியேற்றும் சதித்திட்டம் என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், இது கண்டனத்திற்குரியது எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தமிழக அரசு பொதுத்தேர்வு முறையை அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். மத்திய அரசின் புதியக் கல்விக்கொள்கையை ஏற்க தமிழக அரசு தயாராகிவிட்டதையே இது காட்டுவதாக கூறியுள்ளார்.
பாடச்சுமையை மாணவனின் தோளில் ஏற்றாத, தேர்வு பயத்தை உருவாக்காத, மதிப்பெண்னை கொண்டு அறிவை எடைபோடாத தனித்திறன் முறை கல்வி என்றும், பின்லாந்தும், தென்கொரியாவும் கல்வியில் முதன்மை நாடுகளாக திகழ்வதற்கு அந்த நாடுகளில் மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கும்வகையில் கல்வி முறைகள் இருப்பதே காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் அடிப்படை வசதிகளையும், உட்கட்டமைப்புகளையும் உருவாக்க முனையாத தமிழக அரசு, வெறுமனே தேர்வின் மூலம் மாணவர்களை தரப்படுத்த எண்ணுவது மிகப்பெரும் மோசடி என சாடியுள்ளார். பக்குவம் அடையாத வயதில் பொதுத்தேர்வை வைப்பது, மாணவர்களை பீதியடைச்செய்து அவர்களை இடைநிற்றலுக்கு தள்ளும் என எச்சரித்துள்ளார்.
குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வு முறையை திரும்பபெறவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.