120-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி தலைவர்களை கைப்பற்றிய நாம் தமிழர் கட்சி: சீமான் பெருமிதம்
Recommended Video
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் 120-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி தலைவர் பதவிகளை நாம் தமிழர் கட்சி கைப்பற்றியுள்ளதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
2021 சட்டசபை தேர்தலை எப்படி வலிமையுடன் எதிர்கொள்வது, நீண்ட நெடுங்காலமாக தமிழ்த்தேசிய மக்கள் கொண்டிருக்கும் தன்னாட்சி உரிமை, தமிழீழ விடுதலை, கச்சத்தீவு மீட்பு, தமிழர் நில வளப் பாதுகாப்பு, தமிழக மக்களின் எதிர்கால பாதுகாப்பான நல்வாழ்வு இவை குறித்துதான் பொதுக்குழுவில் விவாதம். 2020-ன் தொடக்கத்தில், பொதுக்குழு கூடுவது புத்தெழுச்சி தருவதாக அமையும்.
இம்மாத இறுதியிலேயே சட்டசபை தேர்தலுக்காக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும். 117 பெண்கள், 117 ஆண்கள் என 234 இடத்தில் சரி சமமாக, பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது எங்கள் கொள்கை முடிவு.
உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்குப் பின்னடைவு என சொல்ல முடியாது. லோக்சபா தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றுள்ளோம்.
4%ல் இருந்து 10%த்தை தொட்டுவிட்டோம்.. 2021ல் நடப்பதை பாருங்கள்.. நாம் தமிழர் சீமான் நம்பிக்கை!
உள்ளாட்சித் தேர்தலில் சாதி, பணம் அதிகமாக வேலை செய்யும். அதையெல்லாம் தாண்டி நாங்கள் எவ்வளவு வாக்குகள் பெற்றோம் என்பதைப் பார்க்க வேண்டும்.
நாங்கள் லோக்சபா தேர்தலில் பெற்ற 4 சதவீத வாக்குகளில் இருந்து 10 சதவீதத்திற்கு முன்னேறியிருப்பது எவ்வளவு பெரிய வளர்ச்சி. ஊரகப் பகுதிகளில் எங்கள் கட்சி சென்று சேராத இடமில்லை என்பதே எங்களுக்கு வெற்றி.
120-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊராட்சி தலைவர் பதவிகளை வென்றுள்ளோம். பல இடங்களில் வார்டு உறுப்பினர்கள் பதவிகளை வென்றுள்ளோம். நாகர்கோவிலில் ஒன்றிய கவுன்சிலர் பதவியை எங்கள் கட்சி வென்றுள்ளது.
இவ்வாறு சீமான் கூறினார்.