குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி நாளை நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற கோரி சென்னையில் நாளை நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெறக் கோரி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் 18-12-2019 புதன்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
டெல்லியில் இரவிலும் நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்- இளைஞர் காங்கிரசார் மெழுகுவர்த்தி பேரணி
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பாக அ.வினோத், தமிழர் தேசிய விடுதலைக் கழகம் சார்பாக ஆ.கி.சோசப் கென்னடி, தமிழர் நலப் பேரியக்கம் சார்பாக மு.களஞ்சியம், மருது மக்கள் இயக்கம் சார்பாக செ.முத்துப்பாண்டி, தமிழர் தாயகம் கட்சி சார்பாக கு.செந்தில் மள்ளர், இஸ்லாமியர் சேவை சங்கம் சார்பில் ஏ.கே.சாகுல் அமீது, தமிழ்த்தேசியக் கட்சி சார்பில் தமிழ்நேசன் ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார்கள்.
இறுதியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனப் பேருரையாற்றுகிறார். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும், தமிழ்த்தேசிய உணர்வாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.