நாமே தீர்வு.. கொரோனாவுக்குப் பிந்தைய உலகின் புதிய யதார்த்தம்... கமல் ஹாசன் புதிய முயற்சி
சென்னை: கொரோனாவுக்குப் பிந்தைய உலகின் புதிய யதார்த்தம் என்ற பெயரில் நாளை காலை 11 மணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உள்பட நான்கு பேருடன் கலந்துரையாட உள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனை ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு விதமாக கையாளுகின்றன. அந்த வகையில் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், ஆளும் கட்சிகளின் செயல்பாட்டை விமர்சிப்பது, பாராட்டுவது என்று வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டு வருகிறார்,.
அண்மையில் கொரோனா வைரஸ் பிரச்சனைகளுக்கு நடுவில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட போது கடுமையாக பொங்கி எழுந்த கமல்ஹாசன், "குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம், தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும்" என்று பதிவிட்டிருந்தார்,
கொரோனா பரவலை தடுக்க வித்தியாச முயற்சி.. காருக்குள் திருமணங்களை நடத்தி அசர வைக்கும் பிரேசில்!
முகத்தில் இருக்கும் புன்னகை
அடுத்த 3 நாட்கள் கழித்து அதாவது மே 12ம் தேதி கமல்ஹாசன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பி இருந்தார். அந்த வாழ்த்தில், தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும் என்று கூறியிருந்தார்.
ஏழைகளுக்கு பலனளிக்குமா
இதேபோல் பிரதமர் மோடியின் அறிவிப்புகளை பாராட்டி, "உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது" என்று ஒரு டுவிட்டை பதிவிட்டிருந்தார்.
மதுக்கடைகள்
இதனிடையே மீண்டும் மதுக்கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்ட போது, "உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது. மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது. திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில். அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது" என்று ஆவேசத்துடன் கமல் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
கமல்ஹாசன்
இதேபோல் 20 லட்சம் கோடி பொருளாதார பேக்கேஜ் விஷயத்திலும் பிரதமர் மோடி, மற்றும் தமிழக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த சூழலில் கொரோனா வைரஸ் தொற்று பிரச்னையில் நாமே தீர்வு காணலாம் என்ற ஒரு முயற்சியை கமல்ஹாசன் இறங்கியுள்ளார். கொரோனாவுக்குப் பிந்தைய உலகின் புதிய யதார்த்தம் என்ற பெயரில் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, வாஷிங்டனில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ரமணன் லக்ஷமி நாராயண், மற்றும் எழுத்தாளர் மற்றும் மனநல ஆலோசகரான டாக்டர் ஷாலினி ஆகியோருடன் நாளை காலை 11 மணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கலந்துரையாடல் நடத்த உள்ளார்.
கொரோனாவுக்கு பின்
இந்த கலந்துரையாடல் கமல்ஹாசனின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் யூடியூப் தளத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த கலந்தரையாடலின் போது கொரோனா வைரஸ் பிரச்சனை, தற்காத்து கொள்வது எப்படி, கொரோனாவுக்கு பிந்தைய உலகம் எப்படி இருக்கும், அப்போது மக்கள் எப்படியான அணுகுமுறையை கையாள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.