ராஜ்யசபா சீட் தராமல் புறக்கணிப்பு... ஸ்டாலினுக்கு எதிராக நாடார் சங்க சுவரொட்டியால் பரபரப்பு
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தங்கள் சமூகத்துக்கு திமுக பிரதிநிதித்துவம் தராததைக் கண்டித்து சென்னையில் நாடார் சங்கத்தினர் சுவரொட்டி ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வரும் 26-ந் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான 3 வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. திமுகவின் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் என்.ஆர் .இளங்கோ ஆகியோரை திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளராக அறிவித்திருந்தார்.
திமுக வேட்பாளர்களில் இஸ்லாமியர் பிரதிநிதித்துவம் இல்லை என்கிற புகைச்சல் ஏற்கனவே எழுந்துள்ளது. இருப்பினும் இதனை திமுக சமாளித்து வருகிறது.
இந்நிலையில் தங்கள் சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் தராத திமுக தலைவர் ஸ்டாலினை கண்டிக்கிறோம்; வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று சென்னை நகரின் பல பகுதிகளில் நாடார் மகாஜன சங்கம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
திமுகவின் ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலில் இம்முறை தென் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் திமுக தரப்போ, 3 சீட்டை வைத்துக் கொண்டு அத்தனை சமூகத்தையும் திருப்திபடுத்துவது இயலாது ஒன்று; இதை திமுக தலைமை சமாளிக்கும் என கூறுகிறது.
திமுகவில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை; நாடார்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்பதை கவனத்தில் கொண்டு அதிமுக தமது வியூகத்தை வகுக்கலாம் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன. இதனால் அதிமுக வெளியிட இருக்கும் ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.