சிபிஎஸ்இ பாடத்தில் தவறான கருத்து.. சென்னையில் நாடார் அமைப்புகள் உண்ணாவிரதம்!
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நாடார் சமுதாயம் குறித்து தவறாக உள்ள கருத்துக்களை நீக்க கோரி சென்னையில் நாடார் மக்கள் சக்தி அமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நாடார் சமுதாயம் குறித்து தவறாக உள்ள கருத்துக்களை நீக்க கோரி சென்னையில் நாடார் மக்கள் சக்தி அமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
மத்திய பாஜக அரசைக் கண்டித்து நாடார் மக்கள் சக்தி அமைப்பு சார்பில் போராட்டம் நடக்கிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடத்தில் உள்ள தவறான கருத்துக்கள்தான் பிரச்சனைக்கு காரணம். இதற்கு எதிராக 2012ம் ஆண்டிலேயே அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதேபோல் இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை ஹைகோர்ட், நாடார் தொடர்பான கருத்துக்களை பாட புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால், இந்த தீர்ப்பு இன்னும் நடைமுறை படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் இதற்கு எதிராக இன்று நாடார் மக்கள் சக்தி, அனைத்து நாடார் சங்கங்கள் உள்ளிட்ட நாடார் அமைப்புகள் சார்பில் உண்ணாவிர போராட்டம் நடக்கிறது. நாடார் மக்கள் சக்தி அமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் தலைமையில் போராட்டம் நடக்கிறது.
இந்த உண்ணாவிரத போராட்டம், காலை 9 மணி முதல் 5 மணி வரை நடக்கும். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தொடங்கி வைத்தார். ராமதாஸ், சீமான் உள்ளிட்ட தலைவர் இந்த போராட்டத்திற்கு வருகை தர இருக்கிறார்கள்.
பல அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், சமூக சேவகர்கள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், சிலர் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.