சட்ட போராட்டம் நடத்தாமல் கொரோனாவில் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு உதவுங்கள் - ஹைகோர்ட்
நடிகர் சங்கத்தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணுவதா? மறு தேர்தலை நடத்துவதா என்று இரு தரப்பினரும் பதில் அளிக்க சென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நடிகர் சங்கத்திற்கு கடந்தாண்டு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதா அல்லது மறு தேர்தல் நடத்துவதா என்பது குறித்து பதிலளிக்க நடிகர் விஷால் மற்றும் எதிர் தரப்பினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புற கலைஞர்கள் உதவி செய்ய வேண்டும் எனவும் இரு தரப்பினருக்கும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்தாண்டு ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் ஏழுமலை மற்றும் பெஞ்சமின் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் நாசர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபீர், தேர்தலை தள்ளிவைக்க மட்டுமே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், தங்களுடைய பதவிக்காலத்தை நீட்டிக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தினார். மேலும், பதவிக்காலம் முடிந்து விட்டதால் அதன் பின் பொதுக்குழுவில் எடுத்த முடிவுகள் செல்லாது எனக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல எனவும் வாதிட்டார்.
தொடர்ந்து, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், நடிகர் சங்க கட்டிட கட்டுமான பணிகள் முடியும் வரை தேர்தலை தள்ளிவைக்க பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பதிவாளருக்கு மனு அளித்திருக்க வேண்டும் என சங்கங்கள் பதிவுச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட சில உறுப்பினர்களின் புகாரின் அடிப்படையில் தேர்தல் நிறுத்தி வைத்து பதிவாளர் உத்தரவிட்டது சட்ட விரோதமானது எனவும் வாதிட்டார்
பிரதமர் மோடியின் பிறந்த நாள்.. இலையில் என்ன தெரிகிறது என்று பாருங்கள்! செம்ம!
எந்த அதிகாரத்தின் கீழ் சங்கத்தின் தேர்தலை நிறுத்தி வைத்து பதிவாளர் உத்தரவிட்டார் என்பதை அரசு குறிப்பிடவில்லை எனவும் அரசு தான் சங்க தேர்தலை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் புகார் தெரிவித்தார். ஏழுமலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜேஷ், பொதுக்குழுவில் பதவிக்காலத்தை நீட்டிக்கவில்லை என மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேர்தல் முடிந்த பின்னர் வழக்குகளை தொடர்ந்து நடத்துவது ஏன் என புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்தனர். மேலும், தொழில் முறை அல்லாத 60 உறுப்பினர்களை தவிர்த்து, மற்ற வாக்குகளை எண்ணி பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
சங்க உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் நிறைய உதவ வேண்டியுள்ளது என தெரிவித்த நீதிபதிகள், கொரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புற கலைஞர்கள் உதவி செய்ய வேண்டும் எனவும் இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தினார்.
இந்த சட்ட போராட்டம் மூலம் இரு தரப்பினரும் என்ன சாதிக்கப் போகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மறு தேர்தல் நடத்துவதாக இருந்தால் மேலும் ஒரு தேர்தல் அதிகாரியை நியமிக்கலாம் எனவும் யோசனை தெரிவித்தனர்.
அப்போது, விஷால் தரப்பில், கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலுக்கு 30 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில் மறு தேர்தல் நடத்த சாத்தியமில்லை எனவும் வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏழுமலை தரப்பு வழக்கறிஞர், தொழில் முறை உறுப்பினர்களை தொழில் முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றியதால் 400 உறுப்பினர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதகாவும் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை 24 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், மறு தேர்தல் நடத்துவதா அல்லது வாக்கு எண்ணிக்கையை நடத்துவதா என்பது குறித்து இரு தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டனர்.