இப்போகூட குட்கா விற்கறாங்க தெரியுமா.. புகாரளித்த 'டைனோசர்'.. சீரியஸாக களத்தில்குதித்த கலெக்டர் ஆபிஸ்
சென்னை: நாகை டவுன் பகுதிகளிலேயே கூட குட்கா கிடைப்பதாக 'டைனாசர்' என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதைக்கூட அலட்சியம் செய்துவிடாமல் நடவடிக்கை எடுத்த நாகை கலெக்டர் அலுவலகத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் குட்கா பொருட்களுக்குப் பல ஆண்டுகளாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல இடங்களில் கூட்கா தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில் குட்கா தொடர்பாக 'டைனாசர்' என்ற கணக்கிலிருந்து அளிக்கப்பட்ட புகாருக்கு நாகை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் 2000ஐ நெருங்கும் கொரோனா.. 20 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு
விலங்குகளின் பெயரில் ட்விட்டர் கணக்குகள்
திமுக ஆட்சி அமைத்த சமயத்தில் மத்திய அரசு என்ற வார்த்தைக்குப் பதிலாக ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் முன்னெடுக்கப்பட்டு. இதற்குப் பதிலாகத் தமிழ்நாடு அல்லது தமிழகம் எது சரி என்ற வாதமும் கிளம்பியது. அப்போது இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், "இவனுக பேசுற பேச்சைப் பார்த்தா டைனோசர்கூட தமிழில்தான் பேசிச்சின்னு சொல்லுவானுங்க போல இருக்கு" எனப் பதிவிட்டனர். DinosaurOffcial என்ற கணக்கு, "ஆமா நான் தமிழில்தான் பேசினேன்" என்று பதில் அளிக்கப்பட்டது.
ஒன்றிய உயிரினங்கள்
அந்தச் சமயத்தில் பலரும் தங்கள் டவிட்டர் கணக்குகளை விலங்குகளின் பெயர்களாக மாற்றிக் கொண்டனர். மேலும், ஒன்றிய உயிரினங்கள் என்ற ஹேஷ்டேக்கும் வைரலானது. அப்போது தொடங்கிய இந்த டிரெண்ட் இப்போது வரையிலும் தொடர்கிறது. இந்தச் சூழில் தான் குட்கா சிக்கல் மீண்டும் பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே குட்கா விற்பனைக்குத் தடை உள்ளது.
மீண்டும் குட்கா
ஆனாலும், மாநிலத்தில் தொடர்ந்து குட்கா கிடைப்பதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது. குட்கா விற்பனை தொடர்வதை நிரூபிக்கும் வகையில் அதிமுக ஆட்சியில் சட்டசபைக்கே ஸ்டாலின் குட்காவை எடுத்துச் சென்றார். இந்தச் சூழலில் திமுக ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் கடந்துள்ள நிலையில், இப்போதும் குட்கா விற்பனை தொடர்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
புகார்
இதையடுத்து கடைகளில் குட்கா சோதனை தீவிரப்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாநிலத்தில் குட்கா சோதனை தீவிரப்படுத்தப்படும். கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுவது உறுதியானால் சம்பந்தப்பட்ட கடைகளுக்குச் சீல் வைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், டைனோசர் என்ற கணக்கில் இருந்து, "ஆளூர் ஷா நவாஸ் அண்ணா! நாகப்பட்டினம் டவுன்ல இப்பகூட கிடைக்கிறது! கொஞ்சம் பார்த்து முடிச்சு விடுங்க அண்ணா" எனப் பதிவிட்டிருந்தார்.
நாகை மாவட்ட நிர்வாகம் பதில்
ஆனால், இந்த ட்வீட்டையும் அலட்சியம் செய்யாமல் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் டவிட்டர் பக்கம் பதில் அளித்துள்ளதன் ஹைலைட். அதாவது இதற்குப் பதிலளித்துள்ள நாகை கலெக்டர் அலுவலகம், "தங்கள் (T-Dinosauroffical) கோரிக்கை மனுவானது (மனு எண் NGP050820211132AM04) சம்பந்தப்பட்ட காவல் துறைக்குக் கொண்டு செல்லப்பட்டு SB - INSPECTOR அலுவலரால் (9750576976) உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது" எனப் பதில் அளிக்கப்பட்டது.
வைரல்
குட்கா தொடர்பான புகாருக்கு நாகை கலெக்டர் அலுவலகம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்குப் பலரும் பாராட்டி வருகின்றனர். அதே டைனோசர் கணக்கிலிருந்து நன்றி தெரிவிக்கும் வகையில், "உடனடி பதில்களும் நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கிறது! Smiling face with heart-shaped eyes @Collector_NGT Folded handsFolded hands மனமார்ந்த நன்றிகள்"எனப் பதிவிடப்பட்டது. நாகை கலெக்டர் அலுவலகத்தின் ட்வீட் இணையத்தில் உடனடியாக வைரலானது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அந்த ட்வீட்டை நாகை மாவட்ட நிர்வாகம் நீக்கியுள்ளது.