அய்யா அம்மான்னுக்கு கதறரப்ப தெரியும்..பால் விற்பனையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த நாகை போலீஸுக்கு மெமோ
சென்னை: பால் விற்பனையாளர்களுக்கு சமூக வலைதளங்களில் பகிரங்க மிட்டல் விடுத்த நாகை போலீஸ்காரர் ரமணன் ரோஹித்துக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் தந்தை- மகன் இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அடுத்தடுத்து பல போலீஸ் தாக்குதல் சம்பவங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் பொதுமக்களை கொடூரமாக தாக்குவேன் என சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஆயுதப் படை போலீஸ்காரர் சரவண முத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இதேபோல் நாகப்பட்டினத்தில் போலீஸ்காரர் ஒருவர் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
தந்தை,மகன் மரணம்... மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துக... தூத்துக்குடி காங்.க்கு ராகுல் வேண்டுகோள்
சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் வீடுகளுக்கு பால் விநியோகிக்கமாட்டோம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.
இது தொடர்பாக நாகையை சேர்ந்த போலீஸ்காரர் ரமணன் ரோஹித் தமது சமூக வலைதளப் பக்கத்தில், பால் விற்பனையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. பின்னர் ரமணன் ரோஹித் தமது பதிவை நீக்கிவிட்டார்.
தற்போது இந்த பதிவு தொடர்பாக போலீஸ்காரர் ரமணன் ரோஹித்திடம் மாவட்ட எஸ்.பி. விளக்கம் கேட்டு மெமோ அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.